Saturday, May 23, 2009

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்2


மே 14, 2009 நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மாரி ஒக்காபே, மனிதாபிமான சிக்கலை தீர்ப்பதில் இலங்கைக்கு உதவுவதற்காக அன்று மாலையில் தனது சிறப்புத் தூதராக விஜய் நம்பியாரை மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார். பான் கீ மூனின் நடவடிக்கைகள் ஐ.நா பொதுச்செயலாளருக்குரிய பொறுப்புடன் இருப்பதாக தெரியவில்லை. இலங்கைக்கு சென்ற விஜய் நம்பியார் வழக்கம் போல திரைமறைவில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டார். விஜய் நம்பியார் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இரகசியம் காக்கப்படுகின்றன.

வன்னியில் தொடர்ந்து ‘பாதுகாப்பு வலையத்திற்குள்’ சிறீலங்கா நடத்திய தாக்குதலில் மக்களின் நிலைமை மோசமாகியது. ஆனாலும் ஐ.நா சபைப் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தமிழர்கள் பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் போதும் சண்டை இடைநிறுத்தம் பற்றி மட்டுமே ஐ.நா கருத்து வெளியிட்டு வந்தது. இன்று வரையில் நிரந்தர போர் நிறுத்தம் என்ற வார்த்தையை பான் கீ மூன் பயன்படுத்தவில்லை. ‘மக்கள் பாதுகாப்பாக வெளியேற தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்பதோடு பான் கீ மூனின் கடமை முடிந்து போனது. போரை நிரந்தரமாக நிறுத்த அழுத்தம் கொடுப்பது வழக்கமான நடைமுறை. காசா, லெபனான், காங்கோ போன்ற இடங்களின் மோதல்களில் ஐ.நா போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. அப்போதெல்லாம் ஐ.நா ‘போர் இடைநிறுத்தம்’ அல்லது ‘தற்காலிக போர் நிறுத்தம்’ கேட்டதில்லை. இலங்கையில் மட்டும் ஏன் ‘போர் இடை நிறுத்தம்’? வன்னியில் நடைபெற்ற போர் அரசியல் அடக்குமுறையின் கோர வடிவம். மனிதாபிமானப் பிரச்சனை ராஜபக்சே அரசின் போர் வெறியினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. போரை நிரந்தரமாக நிறுத்தியிருந்தால் தமிழ் மக்களின் அவலங்களும், துயரங்களும் தானாகவே நின்றிருக்கும். அதற்கு பதிலாக மக்களை தங்களது சொந்த இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்திற்கு உதவுவதாக இருந்தது பான் கீ மூனின் ‘போர் இடைநிறுத்தம்’ அறிவுறுத்தல். அப்படி ‘இடைநிறுத்தம்’ கேட்பதற்கு போர் ஒன்றும் திரைப்படக் காட்சியுமில்லை.

ஐ.நா அமைப்பின் மனித உரிமை பிரகடனங்கள் ‘just war’ என்று எதையும் அங்கீகரிக்கவில்லை. ‘just war’ அல்லது ‘war on terror’ (பயங்கரவாதத்திற்கு எதிரான போர்) என்பதெல்லாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் நிர்வாகத்தின் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கான உற்பத்தி. வன்னியில் தமிழ் மக்களை படுகொலை செய்ய ராஜபக்சே மற்றும் புது டில்லியின் கொள்கை வகுப்பாளர்கள் பயன்படுத்தியதும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பதம். கோத்தபாய ராஜபக்சேயின் மிரட்டல்களும், திட்டங்களும் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரித்தது. அப்போது மேற்குலக நாடுகளும் மௌனமாக இருந்தன.

அப்படியிருக்கும் போது மோதல் நடைபெறும் பகுதியில் போரை தற்காலிக இடைவெளி கொடுக்க ஐ.நா சபை பொதுச்செயலாளர் தெரிவித்தது ஏன்? பான் கீ மூன் தேவைப்பட்டால் இலங்கைக்கு செல்ல தயாரென்று அறிவித்திருந்தார். அப்படி அவர் அறிவித்த காலத்தில் தனது மகனின் திருமண விழா ஏற்பாடுகளை செய்து ரகசியமாக வைத்திருந்தார். ஐ.நாவின் அதிகாரி ‘இரத்தக்குளியல்’ என்று குறிப்பிடுமளவு சிறீலங்காவின் படுகொலைகள் கோரத்தாண்டவம் ஆடிய போதும் எந்த கண்டனத்தையும் பான் கீ மூன் தெரிவிக்கவில்லை. அதனால் சிறீலங்கா அரசு போரின் இறுதி நாட்களில் பல்லாயிரம் தமிழர்களை கொன்று, தடையங்களையும் அழித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு பயணம் செல்வதாக அறிவித்துள்ளது பான் கீ மூன் மீதும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. கடுமையான மோதல் நடைபெறும் நாட்டிற்கு தனது ராஜதந்திர அழுத்தத்தை செலுத்துவதற்கு பதிலாக பொறுப்பில்லாமல் பான் கீ மூன் இருக்க காரணம் யார்?

ஈழத்தில் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த இன்று வரையில் ஐ.நா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 'சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் செயல்படுகின்றன. மற்ற நாடுகள் அதிகாரப்பூர்வமான விவாதத்தை துவங்க முடியாத அளவு அவற்றின் எதிர்ப்பு உள்ளது. அதையும் மீறி எந்த தீர்மானத்தையும் கொண்டுவந்தால் 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தும். போதாத குறைக்கு பாதுகாப்புச் சபையில் சுழல்முறையில் இடம் பெற்றிருக்கும் ஜப்பானின் ஆதரவு சிறீலங்காவிற்கு கிடைத்துள்ளது. அதனால் சிறீலங்கா மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.' இது ஐ.நாவின் மௌனத்திற்கு பலரும் சொல்லும் மேலோட்டமான காரணம்.

சீனாவும், ரஸ்யாவும் எதிர்ப்பதால் ஈழப் பிரச்சனை பற்றிய விவாதத்தை ஐ.நாவில் அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்கவில்லை என்பது உண்மையில்லை. சூடான் நாட்டின் டாஃபூர் பிரச்சனையில் சீனா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. சிறீலங்காவில் சீனாவுக்கு ராணுவ, பொருளாதார அனுகூலம் இருப்பதைப் போல சூடானில் இயற்கை வளங்களை சுரண்டுதல் மற்றும் ஆயுதங்கள் விற்பனையுண்டு. சூடான் அதிபரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க கொண்டு வரப்பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் மீது சீனா, அமெரிக்கா, அல்ஜீரியா, பிரேசில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாக்களிக்கவில்லை. ஆனாலும் 11 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது. சிம்பாப்வே விசயத்திலும் சீனாவின் எதிர்ப்பையும் மீறி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தலையிட்டு ஐ.நா வழியாக நெருக்கடிகளை ராபர்ட் முகாபே அரசுக்கு கொடுத்தன. சிறீலங்கா விவகாரத்தில் மேற்குலக நாடுகள் அப்படி ஒரு நிலையை ஏன் எடுக்கவில்லை? இந்தியாவே அதற்கு காரணம்.


பாகம் 3 தொடரும்

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com