Monday, March 26, 2007

இந்தியா: மருந்து சோதனை எலிகளின் கூடாரம்!

நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் தருகிற மருந்தின் விளைவு, தரம் பற்றியும் அறியாமலே அதை பயன்படுத்துகிறோம். நோய் குணமடைவதற்கு பதிலாக புதிய பிரச்சனை உருவானால் எப்படி இருக்கும்? பல மருத்துவர்கள் கடைகளில் விற்பனைக்கு வராமல் சோதனை கட்டத்தில் இருக்கும் மருந்துகளை ஏழை நோயாளிகளிடம் கொடுத்து பயன்படுத்த சொல்வதுண்டு. இப்படி மருத்துவர் இலவசமாக தருகிற மருந்துகளை பெற்றுக்கொள்ளும் ஏழைகள் நன்றியுடன் பெறுவதுண்டு. தனக்கு தரப்பட்டுள்ள மருந்து சந்தையில் விற்பனை செய்ய உரிமம் பெற்றதல்ல, அதன் பக்கவிளைவுகள் பற்றிய சரியான கணிப்பு இல்லை என்பது ஏழை நோயாளிக்கு தெரிவதில்லை. தனது நோயை பயன்படுத்தி சோதனை ஒன்று நடைபெறுவதும் அவர்களுக்கு தெரிவதில்லை. ஏழ்மையை பயன்படுத்தி ஆய்வுகளை நடத்துவது மருத்துவர்கள் மட்டுமல்ல. மருத்துவர்களுக்கு பின்னால் விற்பனை பிரதிநிதிகள், மருந்து நிறுவனங்கள் என பெரிய கூட்டமே இயங்குகிறது. சிலவேளைகளில் மருத்துவருக்கே தான் செய்யும் செயலின் பின்விளைவுகள் பற்றி தெரிகிறதா என்பது சந்தேகமே. இந்த மருந்து சோதனையை (Clinical Trial) நிகழ்த்தும் மருந்து நிறுவனங்கள் தான் ஒழுக்கமற்ற நடைமுறைகளை கடைபிடிக்கும் முதல் குற்றவாளிகள்.

மருந்து பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் மருந்து சோதனை மிக முக்கியமானது. புதிதாக உருவாக்கப்படும் மருந்து மற்றும் கருவிகளின் செயலாற்றும் திறன் மற்றும் பயனை கணிப்பிட மருந்துவ ஆராய்ச்சி அவசியமாகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்படும் நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் கருவிகளை முதலில் விலங்கினங்கள் மீது சோதனை செய்து வெற்றியடைந்த பின்னர் மட்டுமே பல கட்டங்களாக மனித உடலில் செலுத்தி கட்டுப்பாடான சூழ்நிலையில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்பது பொது நடைமுறை. இந்த சோதனை முடிவுகள் அடிப்படையில் மருந்தின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான இறுதி வடிவமும், அனுமதியும் கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரே ஒரு மருந்து கடைகளில் விற்கப்படும். புதிய மருந்து சோதனைக்கு தங்களை பயன்படுத்த அனுமதிப்பவர்களுக்கு பணம் கிடைப்பதால் தானாகவே பலர் சேர்வதுண்டு. மருந்து சோதனைக்கு தன்னை ஈடுபடுத்த முன்வரும் நபர்களிடம், சோதனையின் தன்மை, பாதிப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிவித்த பின்னரே சம்மதம் பெறப்படவேண்டும் என்பது பொதுவான விதி. நடைமுறையில் இவை அனைத்தும் மீறப்படுகிறது.

பெரும்பாலும் சோதனைக்கு உட்படுபவர்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆய்வு நிறுவனங்களால் தரப்படுவது இல்லை. தன்னை சோதனைக்கு உட்படுத்த சம்மதிப்பவர்கள் பணம் கிடக்கும் ஆசையில் இருப்பதால், உடல்நலம் பற்றிய பாதிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளும் விழிப்புணர்வு குறைந்தே இருக்கிறார்கள். சோதனைக்கு உட்படும் நபர்களின் அறியாமையை பயன்படுத்தி சோதனையின் பக்கவிளைவுகளை பற்றி தெரிவிக்காமல் மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நிறைவேற்றுகின்றன. மருந்து சோதனையில் ஒளிவு மறைவற்ற தன்மையையோ, நேர்மையோ மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் கடைபிடிக்கவில்லை என்று பிரிட்டன், அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகளில் எதிர்ப்புகள் எழுகின்றன. புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்தால் கிடைக்கும் பண இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் இயங்குகின்றன. உலகமயமாக்கல் கொள்கையின் முதலாளித்துவ சித்தாந்தத்தில் இயங்கும் காப்புரிமை, போட்டி, இலாப நோக்கு மட்டுமே மருந்து நிறுவனங்களின் நோக்கமாக அமைந்துவிட்டதால் பக்கவிளைவுகளைப் பற்றி கவலைப்படாது நேர்மையற்ற வழிகளில் ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

பிரிட்டனில் மருந்து சோதனையால் பாதிப்படைந்த அதிர்ச்சிகரமான ஒளிப்பதிவு ஒன்று இங்கே (நேரம் இருப்பின் அவசியம் பார்க்க வேண்டியது):

இந்தியாவில் 1970 மற்றும் 1980-களில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் போது புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் கொண்ட திசுக்கள் 1000 பெண்களிடம் கண்டறியப்பட்ட போதும் ஆய்விற்காக மருத்துவம் செய்யாது (அந்த பெண்களுக்கு தெரிவிக்காது) விடப்பட்டது. சோதனையின் இறுதியில் அவர்களில் 71 பேருக்கு கட்டிகள் உருவாகியது. 9 பேர் புற்றுநோயால் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தனர். 62 பேருக்கு குறைந்த அளவு புற்றுநோய் பரவிய பின்னரே மருத்துவம் செய்யப்பட்டது.

1990ல் அமெரிக்காவை சார்ந்த இரு ஆய்வாளர்கள் பல நாடுகளில் சட்டத்திற்கு புறம்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஒருவகை காய்ச்சலை குணப்படுத்த பயன்பட்டுவந்த Quinacrine http://en.wikipedia.org/wiki/Quinacrine என்னும் ஆபத்தான மருந்தை கருத்தடைக்கு பயன்படுத்த சிலி, இந்தியா, வங்காளதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏழை பெண்கள் மீது இந்த சோதனை நடத்தப்பட்டது. பெண்களின் கருப்பைக்குள் இந்த மாத்திரையை அனுமதி பெறாமலே நுழைத்தனர். இந்த சோதனையின் விழைவாக கருப்பையின் பகுதிகள் கருகியது மட்டுமல்ல பெலோப்பியன் குழாய் அடைபட்டது. முன்னர் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலையீட்டினால் இந்த ஆய்வு மேற்கு நாடுகளில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஆய்வாளர்களால் கடத்தி வரப்பட்டு, மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களில் 30,000 பெண்களுக்கு சட்டத்திற்கு புறம்பான முறைகளில் சோதனைக்காக கருத்தடை செய்யப்பட்டது. மேற்கு வங்காளத்தில் மட்டும் 10,000 பெண்களிடம் இந்த சோதனை நடந்தது. சமூக போராளிகளின் தொடர்ந்த சட்டப்போராட்டத்தின் விளைவாகா உச்சநீதிமன்றம் quinacrine sterilisationஐ இந்தியாவில் தடைசெய்தது. ஆனால் மருத்துவர்கள் antibiotic erythromycin என்னும் மருந்தை அதே காரணத்திற்காக சோதனை செய்ய துவங்கினர். இந்த சட்டப்புறம்பான சோதனையின் மருத்துவ முடிவுகள் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. "இன்னும் மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் quinacrine கிடைக்கிறது" என பத்திரிக்கையாளர் ராஜஸ்ரீ தாஸ் குப்தா தெரிவிக்கிறார்.

அரசுக்கு சொந்தமான மாநில புற்றுநோய் மருத்துவ மையம் திருவனந்தபுரத்தில் 1999 ஆண்டு வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 நோயாளிகளுக்கு சோதனை மருந்து ஒன்றை அவர்கள் அனுமதி இல்லாமல் கொடுத்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை பொருட்களின் வேதியல் பெயர் chemical tetra-O-methyl nor-dihydro-guaiaretic acid (M4N) or tetraglycinyl nor-dihydro-guaiaretic acid (G4N). வாய்புற்றுக்கு ஏற்கனவே கண்டறியப்பட்ட மருந்து இருந்தும் சோதனைக்காக இப்புது வேதிப்பொருள் கொடுத்ததன் மூலம் நோயாளிகளின் உரிமை மீறப்பட்டது. இந்த சோதனை இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது. அவர்களில் 10 நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான உறுப்பு வளர்ச்சி கண்டறியப்பட்டு மருத்துவம் நிறுத்தப்பட்டது. இந்த மருத்துவ ஆய்வை அமெரிக்க நிறுவனமான Johns Hopkins University நன்னெறி ஒப்புதல்கள் வழங்காமலே நிதியுதவி செய்திருந்தது. இந்திய மருத்துவ ஆய்வு மையம் இந்த சோதனை பற்றிய விசாரணையை நடத்தியது. விசாரணை அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்காமல் மறைக்கப்பட்டது.

இந்திய மருத்துவ ஆய்வு மையம் மனிதர்கள் மீது செய்யப்படும் மருத்துவ ஆய்வுகளுக்கான நன்னடத்தை விதிகளை 2000 ஆண்டில் முடிவு செய்தது.
2002ல் Novo Nordisk என்னும் பன்னாட்டு நிறுவனம் சர்க்கரை வியாதிக்கான மருந்து சோதனையின் 3வது கட்டத்தை விலங்குகள் மீதான சோதனையின் அறிக்கையை பெறும் முன்னரே நடத்தியது. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனை அறிக்கையில் ragaglitazar என்னும் இந்த மருந்து எலிகளுக்கு சிறுநீர்ப்பையில் கட்டிகளை உருவாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் இரண்டு கட்ட சோதனைகளை தாண்டாமலே மூன்றாம் கட்ட சோதனைக்கு இந்த ஆய்வை நடத்தப்பட்டது. Ragaglitazar என்னும் இந்த மருந்தை ஐதராபாத்தை சார்ந்த Dr Reddy's Laboratories, என்னும் நிறுவனம், Novo Nordisk அனுமதி பெற்று உருவாக்கியது. தென் அமெரிக்கா, பசிபிக், ஐரோப்பா, இந்தியா போன்ற இடங்களில் இந்த சோதனை நிறைவேற்றப்பட்டது. இந்திய மையங்களின் வழி மட்டும் 130 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டனவா என்பது பற்றிய தகவல்களை வெளியிட Novo Nordisk மறுத்துவிட்டது.

2003ல் மும்பையை சார்ந்த சன் பார்மாசூட்டிகல் தொழிற்சாலை மருத்துவர்களுக்கு சலுகைகளை வழங்கி 400 பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்து சோதனை நடத்தியது. மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் வழியாக அந்த மருத்துவர்களின் அறிக்கைகளை பெற்று ஆய்வு அறிக்கை என மாற்றியது.

2003 - 2004, சாந்தா பயோடெக் நிறுவனம் மாரடைப்பு நோயாளிகள் மீது இரத்தக்கட்டிகளை நீக்க streptokinase என்னும் மருந்தை சோதனை செய்தது. இதே காரணத்திற்கான மருந்து ஏற்கனவே இருந்தும் Streptokinase அவசரமாக உயிரை காப்பாற்ற என்ற பெயரில் கொடுக்கப்பட்டது. இந்த சோதனைகளுக்கான மருத்துவத்துறை சார்ந்த அனுமதி, நோயாளிகளின் அனுமதி பெறப்படவில்லை. சோதனையில் பாதிக்கப்படுபவர்களுக்கான இழப்பீடுகள் பற்றி நிறுவனத்திடம் எந்த விதிமுறைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடும் மருந்து நிறுவன அதிகாரி பற்றிய ஒளிப்பதிவு:

மருந்து நிறுவனங்கள், விற்பனை பிரதிநிதிகள், ஆய்வுக்கூடங்கள், மருத்துவர்கள் என கூட்டணி சேர்ந்து நோயாளிகளது உயிரைப்பற்றி கவலைப்படாமல் நடத்தப்படும் சோதனைகள் இந்தியாவில் இயல்பாகவே நடந்துகொண்டிருக்கிறது. இந்த சூழநிலையில் உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் புதுவரவாக outsourcing அடிப்படையில் மருந்து சோதனை இந்தியாவிற்கு இடம் மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் மருந்து சோதனையால் வரும் பணத்தை குவிக்க தனது பொருளாதார, சட்ட, நிர்வாக கதவுகளை இந்தியா கடந்த பல ஆண்டுகளாக திறக்க துவங்கிவிட்டது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களான Novo Nordisk, Aventis, Novartis, GlaxoSmithKline, Eli Lilly மற்றும் Pfizer மருந்து சோதனைக் கூடங்களை இந்திய நகரங்களில் நிறுவி வருகின்றன. எல்லா மருந்து நிறுவனங்களுக்கும் விருப்பமான இடம் நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலம். 2010ல் சுமார் 2 மில்லியன் இந்திய நோயாளிகள் மீது மருந்து சோதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும். இந்தியாவில் இருக்கிற நோயாளிகளை குறிவைத்தே மருத்துவ சோதனைகளை பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு நகர்த்துகின்றன. அதிகபடியான நோயாளிகள் இருப்பதும், பெரும்பாலானோர் எந்த மருந்துகளையும் பயன்படுத்தாமல் இருப்பதும் தங்களது புதிய மருந்துகளை சோதனை செய்யும் ஆய்வுகளுக்கு நல்லது என மருந்து நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தியாவில் சுமார் 30 மில்லியன் பேருக்கு இதயநோயும், 25 மில்லியன் பேர் இரண்டாவது வகை சர்க்கரை வியாதியிலும், 10 மில்லியன் பேருக்கு மனநோயும் இருப்பதால் இந்த மருந்து சோதனைக்கு தகுதியானதாக இந்தியா கருதப்படுகிறது.

மிக குறைந்த செலவில் எந்த விதமான சிக்கலும் இல்லாமல் இந்தியாவில் மருந்து சோதனை மற்றும் ஆய்வுகளை செய்துவிடமுடியும். அமெரிக்காவை விட பாதி செலவில் மருந்து சோதனையை இந்தியாவில் நிறைவேற்ற முடியும். பன்னாட்டு நிறுவனங்களின் மருந்து ஆய்வுகளுக்கு தேவையான மருத்துவ துறையில் பட்டங்கள் படித்தவர்கள் இந்தியாவில் குறைந்தௌஉதியத்திற்கு வேலை செய்ய காத்திருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 2002ல் மட்டும் மருந்து சோதனை வழி இந்தியா ஈட்டிய பணம் 70 மில்லியன் அமெரிக்க டாலர் என இந்திய தொழில் கூட்டமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இந்த தொகை 200 மில்லியன் அமெரிக்க டாலர் ஆக உயரும். 2010ல் இதன் வேகம் 500 மில்லியன் முதல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை குவிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2007 நிதிநிலை அறிக்கையில் மருத்துவ ஆய்வுகளுக்கு சேவை வரி விலக்கு அளிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து சோதனைக்கான 'விரும்பத்தகுந்த இடமாக' இந்தியாவை மாற்ற இந்த வரிவிலக்கு உதவும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சுமார் 20 நிறுவனங்கள் இந்தியாவில் மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. 2010ஆம் ஆண்டிற்குள் உலக அளவிலான மொத்த மருந்து சோதனையில் 20 சதவிகிதம் சோதனைகள் இந்திய நோயாளிகளிடம் செய்யப்படும்.

மருந்து நிறுவனங்களில் சோதனைகளால் இந்திய மக்கள் குறிப்பாக எழை நோயாளிகள் சந்திக்க இருக்கிற வேதனைகளை பற்றி அரசும், அமைப்புகளும் மௌனமே சாதிக்கிறது. மருந்து சோதனைகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்வதால் எழைகளின் வாழ்வில் வேதனை மட்டுமே மிஞ்சும். மனிதர்களை "சோதனை மிருகங்களாக" பயன்படுத்தும் போக்கு இந்தியாவில் இன்னும் வளரும். எயிட்ஸ் நோய்க்கான மருந்து சோதனை இந்தியாவில் இரண்டாவது கட்டத்தை அடைந்துள்ளது. இந்த சோதனையில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டது நாடறிந்தது. மேனகா காந்தி சுகாதரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பிராணிகள் மீது மருந்து சோதனை செய்வது தடைசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருந்து நிறுவனங்கள் பிராணிகளுக்கு பதிலாக மனிதர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்த துவங்கின.

உலகமயமாக்கல் பொருளாதாரத்தை இலாப நோக்கில் பார்க்கும் முதலாளிகளுக்கு ஏழைகளின் நோய் முதலீட்டிற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் நோயாளிகளது அறியாமை, குடும்ப வறுமை மற்றும் ஏழ்மையை தங்களது ஆய்வு சோதனைகளுக்கான முதலீட்டு தளமாக மனிதாபிமானமற்று கருதுகிறது. நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பின் போது பணக்காரர்கள், முதலாளிகள், நிறுவனங்கள் ஆகியவர்றுன் விருப்பத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டும் அரசு ஏழைகளின் நோயை விற்று தனது பெட்டியில் டாலரை குவித்து 'வளர்ச்சி' என பெருமை கொள்கிறது.

இந்தியா உலக ஒழுங்குமுறைக்கு ஏற்ப மருந்து சோதனைக்கான விதிகள், நோயாளியின் சம்மதம் பெற விதிமுறை போன்றவை ஏற்படுத்தப்பட்டிருகிறது. ஆனால் நடைமுறையில் படிப்பறிவு இல்லாத நோயாளிகளது சம்மதம் பெறுவது பற்றி அறிஞர்கள் சந்தேகமடைகின்றனர். கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை அள்ளிக் குவிப்பதால் இந்திய ஏழைகளின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலையில்லாது பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடங்கிஅய் நிலையில் இந்திய ஏழைகளின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாது இந்திய மருத்துவத்துறையும், அரசுகளும் இயங்குகின்றன.

நோய்க்கு என்ன மருந்து தரப்படுகிறது, அதன் அவசியம் என்ன? என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்? இந்த மருந்தின் தரமென்ன? என்பதை அறியும் உரிமை நோயாளிக்கு உண்டு. நடைமுறையில் மருத்துவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை மதித்து செயல்படுகிறார்களா என்பது கேள்வியே! வளர்ந்த நாடுகளே தடுமாறும் ஒரு பிரச்சனையை இந்தியா வலிய வந்து டாலருக்காக அணைத்துக்கொள்கிறது. இனி மருந்து நிறுவனங்களின் கையில் இந்திய ஏழைகளின் உயிர்.

13 பின்னூட்டங்கள்:

VSK said...

மிகவும் அபாயமான, கவலைதரத்தக்க ஒரு நிகழ்வை மிக அற்புதமாகப் படம்[!!] பிடித்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி, நண்பரே!

நான் இந்தியாவில் இருக்கும்காலை மிகவும் விசனித்த ஒன்று இது.

இதைத் தவிர, போலி மருந்து, தரம் குறைந்த மருந்துக் கம்பெனிகளை ஊக்குவிக்கும், ஒரு சில பச்சை நோட்டுகளுக்காக தரமிழக்கும், ஒரு சிங்கை சுற்றுப்பயண சீட்டுக்காக விலை போகும், மருத்துவர்களைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

தரக்கட்டுப்பாடு, முறையான சோதனை என்பதெல்லாம் நிலை நிறுத்தப்படாததால் வரும் கேடுகள் இவை.

தாயகத்தில் இருக்கும் மனித உரிமைக் கழகம் முதல் வேலையக எடுத்துக் கொண்டு செயல் பட வேண்டிய ஒரு முக்கியமன வேலை இது.

எதனை இழக்கிறோம் என்பதரியாமலேயே தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்காக உடனே ஆற்றிட வேண்டிய செயல் இது!
செய்வார்களா?

ஊடகங்கள் ஏன் இதைக் கண்டுகொள்வதே இல்லை!

அப்பாவி மக்களைப் பற்றி என்று கவலைப்பட்டிருக்கின்றன இவைகள்!

தரமான, தேவைய்யன விழிப்புணர்வுப் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

VSK said...

வேலையாக
முக்கியமான
என்பதறியாமலேயே
தேவையான

அவசரத்தில் [ஆத்திரத்தில்??] எழுதியதால் ஏற்பட்ட எ.பி. களுக்கு வருந்துகிறேன்.

சிவபாலன் said...

திரு

மிகவும் தேவையான பதிவு!

உண்மையில் இதைப் பற்றி ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்ளவேண்டிய விசயம். நன்றாக தொகுத்துள்ளீர்கள்.

நன்றி

தென்றல் said...

'ஈ' படத்தை (கதை மட்டும்) பார்க்கும் பொழுதே, 'அட கொடுமையே !' என்றிருந்தது.

உங்களின் இந்த பதிவு உண்மையான பீதியை கிளப்புகிறது. அருமையான பதிவு!

'மருத்து சோதனை' என்ற பெயரில் இந்திய ஏழைகளின் உயிரை பணயம் வைக்கும் விளையாட்டு...
'சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ)' என்ற பெயரில் இந்திய ஏழை மக்களின் நிலம் பறிமுதல்...
வல்லரசு நாடுகள் 'மின்னனு குப்பைகளை' இந்தியாவில் உள்ள கடலில்தான் கொட்டுகிறார்கள்...
ஒரு புறம், விவசாயிகள் தற்கொலை..
இதற்கும் மேலாக... லஞ்சம், சாதி/மத சண்டைகள்...
இவற்றில் எதை நினைத்து.. எந்த தலைவரை நம்பி ... எதற்காகதான் நம் மக்கள் போராடுவது...?

மிகவும் கவலையளிக்கிறது.

/நோய்க்கு என்ன மருந்து தரப்படுகிறது, அதன் அவசியம் என்ன? என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்? இந்த மருந்தின் தரமென்ன?/
இதலாம் கேட்க வேண்டும் என்பதுதான் கல்வியறிவு இல்லாத நம் மக்களுக்குதான் தெரியுமா?
அப்படியே கேட்டால்தான் நம் மருத்துவர்கள் நோயளிகளை மதித்து விளக்கம் அளிப்பார்களா என்ன?

இரண்டு நாட்களுக்கு முன்புதான்..
'இந்தியாவில் 20% மருந்துகள் போலியானவை' என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
இதற்கெல்லாம், "மருத்துவ அய்யா"வின் புதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறாரோ?

செய்திக்கு நன்றி, திரு!

கலை said...

அதிர்ச்சியான தகவல்களை தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். எல்லோரும் வாசிக்க வேண்டிய கட்டுரைதான்.நன்றி திரு.

மங்கை said...

அருமையான கட்டுரை திடு அவர்களே

இதே Pfizer நிறுவனம் 2006 டிசெம்பரில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மருந்திற்கான சோதனையை நிறுத்திகொள்வதாக அறிவித்துள்ளது. இப்போது அறிவித்தாலும் இந்த சோதனைகளில் தங்கள் உயிரை இழந்தவர்கள் எத்தனையோ பேர்.
இந்தியாவில் தான் இது போல சோதனைகள் அதிகம் நடக்கிறது என்பது உண்மை தான். இங்கு நோயாளிகள் அதிகம் இருப்பது ஒரு காரணம்.
தற்போது 226 இது போல சோதனைகள்
இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறதாம்.

செல்வநாயகி said...

அருமையான பதிவு திரு. இப்போதுதான் பூங்காவிலிருந்து வந்து படித்தேன். ஒவ்வொரு இடுகைக்கும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆர்வமும், உழைப்பும் என்னை எப்போதும் வியக்கவைப்பவை. தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி. நன்றி.

அசுரன் said...

இது குறித்து புதிய ஜனநாயகத்திலும் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்தியாவை எல்லா வகையிலும் அவனது குப்பை கிடங்காக, உற்பத்தி பின் நிலமாக, சந்தையாக பயனபடுத்தும் அவனது திட்டத்தை உண்ராமல் நாடு முன்னேறுது நாடு முன்னேறுது என்றூ கூப்பாடு போடும் கூட்டாத்தார் இது போன்ற விசயங்களை விவாதிக்கும் போது காரியார்த்தமான மௌனம் சாதித்து தமது நேர்மையை பறை சாற்றுகிறார்கள்.

http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2006/march/mar_2006_14u.html

அசுர்ன்

Anonymous said...

மிகவும் தரமான பதிவு...வெகுஜன ஊடகங்கள் மூலமாக மக்களை சென்றடைய வேண்டிய கருத்துக்களை எடுத்து வைத்துள்ளீர்கள்...

இந்தியாவை குப்பைமேடாக்க முயலும் இது போன்ற பன்னாட்டு மருந்து நிறுவனங்களை கூண்டில் அடைக்கவேண்டும்...( டாக்டர் ரெட்டீஸ் லேப் போன்ற நிறுவனங்களும் இதற்க்கு உடந்தையாம் அய்யா)

Jazeela said...

அற்புதமான பதிவு திரு. பூங்காவில் இப்போதுதான் இந்த பதிவை படித்தேன்.

ஏழை மக்களின் உயிரை துட்சமாக நினைப்பவர்களுக்கும், ஏமார்ந்த பெண்களின் கருப்பைக்குள்ளே சென்று விட்ட மருத்துவ துரோகிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.

இதனை பிட்-நோட்டீஸ் போல் எடுத்து விநியோகித்தால் பலன் பெறக் கூடியவர்கள் நிறையப் பேர்.

மாசிலா said...

மருந்து தயாரிப்பாளர்களின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டும்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியமே. உள் நாட்டில் அரசு சரியான முறையில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அளித்தால் இந்த மாதிரியான கேடுகள் நடக்க வாய்ப்பு இருக்காது. மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு மருத்துவராகி, அதே மக்களுக்கு எமனாக வரும் ஈனப்பிறவிகள் இருக்கும் வரை இது தொடரும்தான். மருத்துவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கண்கானிக்க அரசு நடவடிக்கை எடுத்தலும் வேணடும்.

நிற்க,

அமெரிக்கர்கள் முதன் முதலாக அணுகுண்டு வெடித்து சோதனை செய்த போது, தங்களது சொந்த இராணுவ வீரர்களையே சோதனை களமாக ( cobays) உபயோகித்தது. அணுக்கதிர்களாள் தாக்கப்பட்ட வீரர்களுக்கு இதைப்பற்றி எதுவும் சோதனைக்கு முன்பும் பின்னும் தெரிவிக்கப் படவில்லை. இதை விட பெரிய பாவம் என்னவென்றால், கதிர் வீச்சுக்கு இரையான இவ்வீரர்களை நீண்ட காலங்களாக மருத்துவர்கள் சோதித்து கதிர் வீச்சு மனிதன் மீது ஏற்படுத்தும் அழிவுகளை ஆராய்ந்து வந்தனர். இவை பற்றி எதுவும் வீரர்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது. தன் சொந்த மக்களையே ஊதாசீனப்படுத்தும் அமெரிக்கா, பாதுகாப்பற்ற ஏழை மக்கள் மீதா பாசத்தை கொட்டப் போகிறது?

நாம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

நம் இந்திய சமுதாய கட்டமைப்பில் நாமே நம்மை தாழ்த்தி உதாசீனப் படுத்தியது ஏனைய நயவஞ்சக நரிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதம் ஆகிவிட்டது.

விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.

முரளிகண்ணன் said...

மிக மிக அவசியமான பொதுமக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டிய பதிவு. நன்றிகள் பல.

Unknown said...

மிகவும் அவசியமான ஒரு பதிவு! தொகுத்தமைக்கு நன்றிகள்.

கொள்ளையடிக்கும் மருந்து கம்பெனிகளின் தாயகமான அமெரிக்காவில், மாதத்திற்கு ஒரு மருந்து விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுகிறது. இன்று நன்றாக இருக்கும் என்று சான்றளிக்கும் மருந்து, சில பல பேர் உயிரை விட்ட பிறகு, அது நொட்டை இது நொள்ளையென்று, சாவகாசமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. அடுத்த வாரமே புதிதாக ஒன்று அறிமுகப் படுத்தப்படுகிறது.

இவ்வளவு சீக்கிரம் மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும், விற்பனைக்குக் கொண்டுவருவதற்கும் ஒரு சோதனைக் கூடம் தேவை. மருந்துகள் மற்றும் நோய்கள் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாத இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் இலக்கு.

மருந்துச் சோதனைகள் மீது கட்டுப்பாடுகள், மக்கள் விழிப்புணர்வு மிக அவசியம். ஆனால், நமது அரசாங்கம் விழித்தெழ மருந்து கண்டுபிடிப்பது யார்? எப்போது??

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com