Monday, January 15, 2007

பெரியார் கடவுளுக்கு எதிரியா?

பெரியார் ஒரு நாத்தீகர். கடவுளின் எதிரி. ஆன்மீகவாதிகளுக்கு எதிரி என பெரியாரையும் அவரது போராட்டங்களையும் பற்றியும் வருகிற பரப்புரைகள் நாம் அறிந்தவை. பெரியார் கடவுளுக்கு எதிரியா? இந்த கேள்விக்கு பெரியார் கருத்துக்களை அவரது சுயமரியாதை போராட்டத்தோடு இணைத்து பார்த்தால் மட்டுமே உண்மையை உணரமுடியும். சுயமரியாதை போராட்டமும் பெரியார் மதங்களை பற்றி கொண்டிருந்த பார்வையும் ஒன்றோடொன்று இணைந்தவை.

பெரியார் ஆச்சாரமான ஆத்தீக குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் பராமரிக்கும் கோவில் ஒன்று இருந்தது. இளவயதில் காசியில் 'இந்து சமய' மடங்களுக்கு சென்று சிறிதுகாலம் துறவறம் பூண்டவர். பெரியார் மதம் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாரா? "எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி-மதத்தையோ உணமையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கின்றேன்....எப்போதிலிருந்து இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் யோசித்து பார்த்திருக்கின்றேன், கண்டுபிடிக்கமுடியவில்லை." அவரே சொல்கிறார் (நவமணி 1939 ஆண்டு மலர்).

1929, பிப்ரவரி 17-18 தேதியில் செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தான் மதத்தை பின்பற்றக்கூடாதென தீர்மானிக்கப்பட்டது. "(இந்துமதம்)பிறவியினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கிறது, வருணாசிரம முறையைத் தோற்றுவித்து வளர்க்கிறது" என அந்த மாநாட்டு தீர்மானம் பெரியார் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டது. 'இந்து மதம்' ஆன்மீக தத்துவத்துடன் இயங்குவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளவில்லை. அதன் இயக்கமும், தாக்கமும் சமூக வாழ்வில் பல கேடுகளை விளைவித்தன. குறிப்பிட்ட சாதியினர் அனைத்து வளங்களையும், வாய்ப்புகளையும் அனுபவிக்க, பெரும்பான்மை மக்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டிய நிலை. அடிமைப்படுத்தப்பட்ட மக்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பலவித சாத்திரங்கள், மூடப்பழக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் தான் பெரியார் மதத்தை பொருள்முதல்வாத செல்வாக்கு அடிப்படையில் அணுகினார்.

மனித இனத்தை வகைப்படுத்த ஒருகாலத்தில் சில நெறிகள் அவசியமாயிற்று. அன்றைய காலம் வேறுமாதிரியான சமூக, அரசியல், பொருளாதார சூழலில் மனித சமுதாயம் குழுக்களாக இருந்தது. அன்று இருந்த சமூகத்தில் இன்று இருப்பது போன்ற மக்கள் அமைப்பு முறைகளும், சட்டங்களும் இல்லை. மனித இனத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு மனிதகுழுக்களும் நெறிகளை தனக்கென உருவாக்கியது. உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் எந்த வகை மக்கள் ஆதிக்கம் அதிகம் இருந்ததோ அவர்களுக்கு ஆதரவாகவே அமைக்கப்பட்டன. அவற்றை அனைவரும் கடைபிடிக்க வைப்பதற்காக இயற்கையை இணைத்து வழிப்பாட்டு முறைகள் தோன்றலாயிற்று. அதனால் தான் பாகன் வழிபாட்டுமுறையில் இயற்கையை, தனது அறிவுக்கு எட்டாதவற்றை, மனிதன் எதை பார்த்து பயப்பட்டானோ அவற்றை என எல்லாவற்றையும் வழிபட்டு வந்தனர். கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என எங்கும் இந்த வழிபாடுகள் விதவிதமாக இருந்துள்ளன. அந்த நிலையை கடந்து மனித சமுதாயம் இன்று அமைப்பு முறையிலும், சட்டங்களின் அடிப்படையிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்ப மதத்தின் அணுகுமுறையில், தத்துவங்களில், நெறிமுறைகளில், நம்பிக்கைகளில் மாற்றம் அவசியமானது. ஒரு காலத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பது மனித சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு செல்ல அனுமதிக்காத பழமைவாதமாக தான் இருக்க இயலும். முன்னர் பூமி தட்டையானது என்று கிறிஸ்தவ மத நம்பிக்கையாக இருந்தது. இந்து மதத்திலும் பூமியை பாயாக சுருட்டிய புராணக்கதைகளை பார்க்கிறோம். பூமி தட்டையல்ல, உருண்டை வடிவமானது என நிரூபித்தான் ஒரு அறிவியலாளன். மதவாதிகள் அவனை கடுமையாக எதிர்த்தனர். இவை அனைத்தும் கடந்த காலங்களில் இருந்த நம்பிக்கை. கடைசியில் என்ன ஆயிற்று? பூமி உருண்டை என்பதை அறிவியலும், கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. கத்தோலிக்க மதத்தலைவர் போப் இதற்காக மன்னிப்பும் கேட்டார்.

"காலநிலைக்கும், சமுதாயநிலைக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் ஏற்றபடி முறைகள் வகுக்கப்படவேண்டியவை தவிர, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் பொருத்தமென்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லையென்பது தான் பொருள்" என்றார் பெரியார். மதத்தின் பழைய கருத்துக்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி மறுமலர்ச்சி ஏற்படுத்த கலகம் செய்தவர் பெரியார். அறிவியலில் எப்படி ஒரு ஆய்வாளரின் கண்டுபிடிப்பை இன்னொருவரது ஆய்வு முடிவுகள் பொய்யென நிரூபித்தால் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதே அறிவியல் பார்வையை பெரியார் மதத்திற்கும் வைத்தார். ஒரு காலத்தில் எழுதப்பட்ட, சொல்லப்பட்ட தத்துவங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள் நடப்பு காலத்திற்கு பொருந்துமா என மதங்களை பரிசீலனை செய்து மாற்றங்களை உள்வாங்குவது ஒவ்வொரு காலத்திலும் அவசியம். இதை தான் ஆங்கிலத்தில் contexualising என்பார்கள். மதவாதிகளுக்கு மாற்றங்களை உள்வாங்கும் திறந்த மனது, எதிர்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் ஆகியவை அவசியம். இல்லையென்றால் மதம் உட்பட அனைத்து சமூக நிறுவனங்களும் அடிமைத்தனத்தின் சின்னமாக தான் விளங்கும். ஒரு காலத்தில் குழந்தை திருமணங்கள், விதவைகளுக்கு திருமண மறுப்பு, உடன்கட்டை ஏற்றிக் கொல்லுதல் என இருந்தவை இன்றைய சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளதா? இன்றைய மனித உரிமை அடிப்படையில் இவை அனைத்தும் குற்றங்கள். இப்படியான ஒரு வளர்ச்சி நிலைக்கு நாம் முன்னேற பல போராட்டங்கள் காரணமாக இருந்தன. பெரியாரும் இப்படியான ஒரு போராட்டத்தையே ஏற்படுத்தி எதிர்கருத்தை உருவாக்கினார். போராட்டம் செய்பவர்களை கண்டிப்பது மட்டும் தான் குறிக்கோளாக இருந்தால் போராட்டங்களின் காரணம் இருந்துகொண்டே இருக்கும். 'இந்து மதவாதிகள்' இந்த தவறை தான் செய்கிறார்கள். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பிரச்சனைகளின் அடிப்படை காரணிகளை கண்டு அவற்றை மாற்றினால் மதத்தில் மட்டுமல்ல மனங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்கிற குறளில் இதை தான் வள்ளுவர் ஆழ்ந்த பொருளுடன் கூறுகிறார்.

இதற்கு உதாரணமாக ஹாங்காங்கில் நடந்த ஒரு விடயத்தை இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஹாங்காங்கில் எந்த பகுதியில் சென்றாலும் விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கங்கள், பூங்கா, நூலகம் என பொழுதுபோக்கு இடங்கள் நிறைந்து காணப்படும். மேற்கு உலக நாடுகளில் கூட இந்த வசதி குறைவு. இதற்கு பின்னால் 1970களில் மாணவர்களும், இளைய தலைமுறையும் உருவாக்கிய போராட்ட சூழல் காரணம். அன்றைய அரசு பிரச்சனையின் காரணத்தை ஆய்வு செய்தபோது பொழுதுபோக்கு இல்லாமல் மனஇறுக்கத்துடன் இளைய தலைமுறையினர் இருப்பதை கண்டுபிடித்தது. பிறகென்ன ஊரெல்லாம் பொழுதுபோக்கு வசதியை உருவாக்கியது அரசு. அதன் பின்னர் பிரச்சனையும் ஓய்ந்தது. இன்று ஹாங்காங்கில் வேலையில்லாமை பற்றி அப்படியான ஆய்வுகள் இல்லை என்பது வேறு விடயம். அன்று போராடிய இளைஞர்களை அடித்து நொறுக்கியிருந்தால், இன்றைய ஹாங்காங் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

"மனிதத்தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பெயரால் ஏற்பட்டுள்ள பழக்கவழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு கருதுகிறது." என்கிறது 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம். "நமது நாட்டைப் பொறுத்தமட்டில் 'பிறவிப்படியும் தொழில்படியும்' ஒழிந்த நிலைதான் சமதர்மநிலை என்று சொல்லப்படுவதாகும்." பெரியாரும், சுயமரியாதைக்காரர்களும் மதத்தை எதிர்க்க அடிப்படை காரணம் என்ன என்பது இந்த தீர்மானத்தில் விளங்குகிறது.

இந்தியா முழுவதும் இன்று பரவியுள்ள மதவெறியை பார்க்கும் போது, "இந்திய நாட்டில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும், பகைகளும் அழிய வேண்டுமானால், அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமென்று முடிவு செய்கிறது" என்கிற 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம் எவ்வளவு பொருத்தமானது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆன்மீகம் என்பதும் மதம் என்பதும் வேறுபட்டவை. மதம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பின் பின்னால் அது சொல்லக்கூடிய அனைத்தையும் ஏற்ற சார்ந்திருப்பு. தான் சார்ந்துள்ளது தான் உண்மை, அது தான் வேதம், அது தான் இறைநெறி, அது தான் சொர்க்கத்திற்கு வழி என வியாபார நிறுவங்களைப் போல சண்டையிடும் நிலை மதம் சார்ந்தது. ஆன்மீகம் என்பது அறநெறியை போதிப்பது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். அய்யனாரை வழிபட்டாலும், அல்லாவை தொழுதாலும், கிருஸ்ணனை கும்பிட்டாலும், இயேவை வேண்டினாலும், புத்தனை ஏற்றுக்கொண்டாலும், சுயமரியாதை மீது பற்றுகொண்டு மனிதநேயமாக இருந்தாலும் நாம் மனிதர்கள் ஒரு இனம் என்னும் ஆழமான எண்ணமே அறநெறியாக இருக்க இயலும். போட்டி போட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதும், தடுப்பதும், ஆதிக்கம் செலுத்துவதும் ஆன்மீகத்தில் எந்த வகை? இந்த வெறி மதம் சார்ந்தது தானே தவிர அறநெறியோ ஆன்மீகமோ அல்ல. அறநெறியாளர்களாக இருந்தால் இவ்வகை செயல்களை செய்யமாட்டார்கள். இப்படிப்பட்ட செயல்கள் நடக்கும் காலங்களில் பெரியார் போன்ற போராட்டக்காரர்கள் சமுதாயத்திற்கு அவசியம் தேவை. அவர்கள் உருவாக்குகிற போராட்டங்கள் என்னும் காலக்கண்ணாடியை பார்த்தாவது நாம் திருந்தியிருக்கிறோமா? இது போராட்டக்காரனின் குற்றமல்ல. மதக் கலவரக்காரர்களின் குற்றம்.

இந்து மதத்தின் வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தையும், அறிவுக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களையும் எதிர்த்ததே பெரியாருடைய கொள்கை. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து மதத்தின் சாதி ஆதிக்க வேதங்கள் நாயை விட கேவலமாக நடத்தியதை உடைக்கவே பெரியாரின் கட்டளைகள் "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என உச்சமாக அமைந்தது. இந்துமத புராணத்தில் சிக்கி அடிமைப்பட்டு கிடந்தவர்களிடம் தட்டியெழுப்ப விடுத்த அறைக்கூவல் தான் இது. இந்த அறைக்கூவல் பிராமணீய ஆதிக்கத்தில் கற்பிக்கப்பட்ட கடவுளை கட்டுடைப்பதாகவே அமைந்தது. பெரியார் நேரிய, உயரிய சுயமரியாதையுடன் நடத்தும் வழியை ஏற்க தயாராகவே இருந்தார். "உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்" (சுயமரியாதை போராட்டத்தின் உச்சத்தில் பெரியார் 1948ல் சொன்னவை இவை) என்னும் அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த அடிப்படையில் தான் 1954ல் உலக பௌத்த சங்கத்தலைவரான டாக்டர் மல்லை சேகரா போன்ற அறிஞர்களை அழைத்து பௌத்த சங்கங்களை 'இந்து மதம்' அழித்தது பற்றிய பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 'புத்த பெருமாள் விழா' கொண்டாடப்பட்டது. 1954 டிசம்பர் 3ல் மனைவி மணியம்மையாருடன் பர்மாவிற்கு சென்று உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டார். பௌத்த கொள்கைகளால் பெரியார் கவரப்பட்டிருந்த போதும் பௌத்த சமயத்தில் இணையவில்லை. பௌத்த சமயத்தில் புத்தரையும் பிற தெய்வங்களையும் தெய்வமாக மாற்றி வழிபடும் முறையும், பௌத்த மடங்களில் உருவாகியிருந்த மூடநம்பிக்கைகளும் சடங்குகளும் தான் அதற்கான அடிப்படை காரணம். இந்து சமயத்தை சார்ந்த ஆதிக்க சாதியினரின் தாக்கம் பௌத்த நெறியில் ஊடுருவியதன் விளைவு இந்து மத அடையாளங்கள் பௌத்த நெறியிலும் புகுத்தப்பட்டு மதமாக்கப்பட்டது. புத்தருக்கும், பிள்ளையாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தாய்லாந்து போன்ற நாடுகளில் பௌத்த விகாரைகளில் பிள்ளையார் வழிபாட்டை காணலாம். இந்த வழிபாட்டு முறைகள் மன்னர் காலங்களிலும் அதன் பின்னருமே புகுத்தப்பட்டவை. அதனால் தான் அண்ணல் அம்பேத்கார் பௌத்தமதத்திற்கு மாறிய வேளை பெரியாரை அழைத்தபோதும் அன்பாக மறுத்து அண்ணலுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்த ஆதரவு வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தை விட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை என்ற பார்வையில் அமைந்தது.

பெரியார் இராமாயணத்தை வெறுத்தது, பிள்ளையார் சிலையை உடைத்தவை போன்ற செயல்கள் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் விதமாக தான் அமைந்தன. அதனால் தான் ஆரிய கடவுள்களையும், அடையாளங்களையும் கடுமையாக எதிர்த்தார். இந்த போராட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டு பொருட்களை எரித்து சுதேசி இயக்கம் உருவானது போன்று அந்த காலகட்டத்தில் அமைந்த ஒரு போராட்ட முறை. பெரியார் எந்த வழிபாட்டுத்தலங்களிலும் அத்துமீறி குழப்பம் ஏற்படுத்தவில்லை.ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கோவிலில் வழிபடும் உரிமையை தடுத்ததால் மட்டுமல்ல, கோயில் அமைந்துள்ள பகுதியின் பொதுச்சாலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் செல்ல ஆதிக்கச்சாதியினர் தடுத்ததால் வைக்கம் போராட்டத்தை பெரியார் தலைமையேற்று நடத்தினார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் தெய்வங்களான (நாட்டார் வழக்கியல் தெய்வங்கள்) கருப்பசாமியையோ, இசக்கியம்மாவையோ, மாரியம்மாளையோ, அய்யனாரையோ, சாஸ்தாவையோ, மாடனையோ பெரியார் உடைக்கவோ, எரிக்கவோ இல்லை.

இவை அனைத்தும் பெரியார் மதங்களையும், அதன் போர்வையில் நடக்கிற மூடப்பழக்கத்தையும், மோசடிகளையும் எதிர்த்தார் என்பதற்கு அடையாளம் தானே தவிர ஒட்டுமொத்தமாக ஆன்மீகவாதிகளின் எதிரியல்ல என்பதை விளக்குகிறது.

மனிதன் மானமும் மரியாதையும் உள்ளவர்களாக வாழவேண்டும் என்பது தான் பெரியாரின் கனவு. அந்த கனவை அடைய அவர் தன்னையும் இழந்தார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் எதுவாகினும் ஏற்றுக்கொண்டார். சிறைத்தண்டனை முதல் ஆதிக்கச்சாதி எதிர்ப்பாளர்களின் செருப்பு வீச்சு, கல்லெறி, மலம் வீச்சு, அழுகிய முட்டை வீச்சு என அனைத்தையும் தானே தாங்கிய படி தமிழர்களின் சுயமரியாதையை பெற்றுத்தந்தவர் இந்த விடுதலைக் கதிரவன். தாங்க இயலாத உடல் நோயில் 95 வயதிலும் மோத்திரப்பையை ஒரு கையில் சுமந்து பொதுக்கூட்டங்களில் ஓயாது இனமானம் காக்கும் விடுதலைக்காக முழங்கினார் அந்த பகுத்தறிவு கிழவன். கூனி, குறுகி நின்றவர்களது தலைமுறை எழுந்து நடந்து, படித்து, உயர்கல்வி கற்று அதிகாரம் முதல் அறிவுத்துறை வரை இன்று வளர பெரியார் என்னும் அயராத உழைப்பாளியின் சிந்தனை, செயல், தியாகம் நிறைந்தது. அதனால் தான் இன்றும் ஆதிக்கபுரிகளுக்கும், ஆதிக்கசாதியின் ஊடகங்களுக்கும் பெரியார் என்றால் கசப்பான மருந்து. ஆதிக்கசக்திகளுக்கு போராளிகள் என்றும் கசப்பானவர்களே! அதனால் தான் பெரியாரின் சுயமரியாதை போராட்டத்தை கடவுளுக்கு எதிரானதாக சித்தரிக்கிறார்கள். இயற்கைக்கு புறம்பான ஆதிக்கவாதிகள் தங்களை தற்காத்துகொள்ள செய்கிற தந்திரங்களில் இதுவும் ஒன்று. தமிழர்கள் வாழ்வில் தன்மானமும், சுயமரியாதையும் பெற்று தந்ததில் பெரியார் என்றும் பெரியவரே!

திரு

17 பின்னூட்டங்கள்:

Machi said...

/பெரியார் மதங்களையும், அதன் போர்வையில் நடக்கிற மூடப்பழக்கத்தையும், மோசடிகளையும் எதிர்த்தார் என்பதற்கு அடையாளம் தானே தவிர ஒட்டுமொத்தமாக ஆன்மீகவாதிகளின் எதிரியல்ல என்பதை விளக்குகிறது/

/தமிழர்கள் வாழ்வில் தன்மானமும், சுயமரியாதையும் பெற்று தந்ததில் பெரியார் என்றும் பெரிவரே/

நன்றாக சொன்னிர்கள்.

சிவபாலன் said...

திரு,

மிக நல்ல பதிவு!!

வாழ்த்துக்கள்!!

சாத்வீகன் said...

நல்ல பதிவு.

நன்றி.

Thamizhan said...

நன்றி நண்பரே.
பெரியாரின் அடிப்படைக் கொள்கையே மனித நேய்ந்தான்.அவரிடம் தொழர் ஒருவர் கடவுள் இல்லை என்கிறீர்களே திடீரெனக் கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார்.உடனே பெரியார் நமக்கு வேலை மிச்சம்.கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிடுவோம்.இவ்வளவு கொடுமைகளும் அநியாயங்களும் நடக்கிறது இப்போது வராத கடவுள் இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார் என்றார்.
கடவுள் பெயரால் நடக்கும் அநியாய்ங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதற்கு மனிதனால் உண்டாக்கப்பட்டக் கடவுளை ஒழிப்பதே ஒரே வழி என்று போராடினார்.

மணியன் said...

நல்ல பதிவு. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல் மதவாதமோ மத எதிர்ப்போ தீவிர பற்று மனித நேயத்திற்கு தீங்காகவே முடிகிறது. இது அன்பே வடிவான கடவுளுக்கும் ஒப்பானதில்லை, பெரியாருக்கும் ஒப்பானதில்லை.

செல்வநாயகி said...

நல்ல பதிவு

கலை said...

நல்ல பதிவு திரு!

&&அய்யனாரை வழிபட்டாலும், அல்லாவை தொழுதாலும், கிருஸ்ணனை கும்பிட்டாலும், இயேவை வேண்டினாலும், புத்தனை ஏற்றுக்கொண்டாலும், சுயமரியாதை மீது பற்றுகொண்டு மனிதநேயமாக இருந்தாலும் நாம் மனிதர்கள் ஒரு இனம் என்னும் ஆழமான எண்ணமே அறநெறியாக இருக்க இயலும். போட்டி போட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதும், தடுப்பதும், ஆதிக்கம் செலுத்துவதும் ஆன்மீகத்தில் எந்த வகை?&&

நியாயமான கேள்வி.

Anonymous said...

நண்பர் திரு.
நெடுநாட்களாக எழுத எண்ணியிருந்த பதிவு.நான் எழுதியிருந்தால் இவ்வளவு அழுத்தமாக எழுதியிருக்க மாட்டேன். நன்றி!

சாத்தான்குளத்தான்

மலைநாடான் said...

திரு!

அருமையான ஒரு பதிவு.

டண்டணக்கா said...

வார்த்தை சிதறல்கள் அற்ற மற்றுமொறு அழுத்தமான நல்ல பதிவு. உங்களின் ஆரோக்கியமான அனுகுமுறை பாராட்டுக்குறியது. Thanks for writing.

thiru said...

//குறும்பன் said...
/பெரியார் மதங்களையும், அதன் போர்வையில் நடக்கிற மூடப்பழக்கத்தையும், மோசடிகளையும் எதிர்த்தார் என்பதற்கு அடையாளம் தானே தவிர ஒட்டுமொத்தமாக ஆன்மீகவாதிகளின் எதிரியல்ல என்பதை விளக்குகிறது/

/தமிழர்கள் வாழ்வில் தன்மானமும், சுயமரியாதையும் பெற்று தந்ததில் பெரியார் என்றும் பெரிவரே/

நன்றாக சொன்னிர்கள்.

1/15/2007 09:02:00 PM//

//
Sivabalan said...
திரு,

மிக நல்ல பதிவு!!

வாழ்த்துக்கள்!!

1/15/2007 09:17:00 PM//


//சாத்வீகன் said...
நல்ல பதிவு.

நன்றி.//

நன்றி நண்பர்களே!

thiru said...

//Thamizhan said...
நன்றி நண்பரே.
பெரியாரின் அடிப்படைக் கொள்கையே மனித நேய்ந்தான்.அவரிடம் தொழர் ஒருவர் கடவுள் இல்லை என்கிறீர்களே திடீரெனக் கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார்.உடனே பெரியார் நமக்கு வேலை மிச்சம்.கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிடுவோம்.இவ்வளவு கொடுமைகளும் அநியாயங்களும் நடக்கிறது இப்போது வராத கடவுள் இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார் என்றார்.
கடவுள் பெயரால் நடக்கும் அநியாய்ங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதற்கு மனிதனால் உண்டாக்கப்பட்டக் கடவுளை ஒழிப்பதே ஒரே வழி என்று போராடினார்.//

மேலதிக தகவலுக்கும் வருகைக்கும் நன்றி தமிழன்

thiru said...

// மணியன் said...
நல்ல பதிவு. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல் மதவாதமோ மத எதிர்ப்போ தீவிர பற்று மனித நேயத்திற்கு தீங்காகவே முடிகிறது. இது அன்பே வடிவான கடவுளுக்கும் ஒப்பானதில்லை, பெரியாருக்கும் ஒப்பானதில்லை.//

உண்மை தான் மனியன்! ஆன்மீகத்தையும், பெரியாரையும் புருந்துகொண்டு கடைபிடிக்கும் விதத்தில் இருக்கிறது.
-----------

செல்வநாயகி, கலை நன்றி!

thiru said...

//ஆசிப் மீரான் said...
நண்பர் திரு.
நெடுநாட்களாக எழுத எண்ணியிருந்த பதிவு.நான் எழுதியிருந்தால் இவ்வளவு அழுத்தமாக எழுதியிருக்க மாட்டேன். நன்றி!
சாத்தான்குளத்தான் //

முதல் வருகைக்கு நன்றி நண்பரே! இது பாரட்ட கையாண்ட மொழியாக எடுத்துக்கொள்கிறேன். மற்றபடி உங்கள் அளவு எளிய நடையில் சொல்லஅறியாதவன் நான்.

thiru said...

//டண்டணக்கா said...
வார்த்தை சிதறல்கள் அற்ற மற்றுமொறு அழுத்தமான நல்ல பதிவு. உங்களின் ஆரோக்கியமான அனுகுமுறை பாராட்டுக்குறியது. Thanks for writing..//

நன்றி நண்பரே! காமராசர் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை!

மாநிலத்தமிழ்ச்சங்கம் said...

உண்மைதான் உங்களுடைய வரிகள்! http://meykandar.blogspot.com/2010/12/2.html, http://meykandar.blogspot.com/2010/12/1.html தந்தை பெரியார் கடவுள் ஏற்பாளரே எனக் கூறும் இந்த இணைப்பையும் படித்துப் பாருங்கள்

thiru said...

//மாநிலத்தமிழ்ச்சங்கம் said...

உண்மைதான் உங்களுடைய வரிகள்! http://meykandar.blogspot.com/2010/12/2.html, http://meykandar.blogspot.com/2010/12/1.html தந்தை பெரியார் கடவுள் ஏற்பாளரே எனக் கூறும் இந்த இணைப்பையும் படித்துப் பாருங்கள்//

பெரியார் கடவுள் ஏற்பாளர் என்பதல்ல இப்பதிவு. கடவுள், மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை கற்பித்து சகமனிதர்களை கொலை செய்வதும், அடிமைப்படுத்துவதும் பெரியாருக்கு ஏற்புடையதல்ல.

உங்கள் பதிவை வாசிக்கிறேன்!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com