Monday, November 06, 2006

கீதையின் அடிமைக் கட்டுகள்!

"கடமையை செய் பலனை எதிர்பாராதே!"
கடவுளுக்கெல்லாம் கடவுளும், முழுமுதல் கடவுளுமாக கருதப்படுகிற கண்ணன் பகவத்கீதையில் அருளிய வார்த்தைகள் இவை. மேலெழுந்த விதமாக இந்த வாக்கியத்தை பார்த்தால் அருமையான வார்த்தைகளாக தெரியும். ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் சூட்சுமம் விளங்கும்.

நீங்கள் மைக்ரோசாப்ட்ல் அல்லது வேறு எந்த இடத்திலும் வேலை செய்யுங்கள் அதற்கு பலனாக ஊதியம் அல்லது எந்த பலனையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்சிக்காக, ஊருக்காக உழையுங்கள் அதன் பலனை எதிர்பாராதீர்கள். இப்படி உங்களிடம் யாராவது சொன்னால் ஏற்க முடியுமா? நாள் முழுவதும் வயல்வெளியில், கடற்பரப்பில், காட்டில், வீட்டு வேலைகளில், சுத்தம் செய்தலில், புதைகுழிகளில் பிணம் எரித்தலில் ஈடுபடுங்கள் அது உங்கள் கடமை. ஆனால் இந்த வேலைக்கு பலனாக பொருள், செல்வம், கல்வி, புகழ், மனிதநேயம் என எதையும் எதிர்பாராமல் உழையுங்கள். இந்த வார்த்தைகள் யாருக்காக? உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சாதி அடிமைகளாக்கப்பட்ட மக்களுக்கு என சொல்லப்பட்டதா? இல்லை உண்டு கொழுத்து, உழைப்பவன் மீது ஏறி மிதிக்கிறவர்களுக்கு ஆதரவாக; அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அடக்கி வைப்பதற்காக சொல்லப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு விடை தெரிய கீதை உருவாக்கப்பட்ட காலச்சூழலோடு புரிந்து கொள்வது அவசியம்.

இந்துக்களுக்கு புனித நூல் என புகுத்தப்படுகிற பகவத்கீதை எல்லாருக்கும் பொதுவான கருத்தை சொல்கிறதா? கீதை ஆரிய சார்புத்தன்மையுடன் வர்ணாஸ்ரம சாதி அமைப்பில் இருக்கிற உயர் சாதியினருக்கு ஆதரவாக பிராமணீயத்தை உயர்த்தி வைக்கிறது. கீதை உழைக்கும் மக்களின் வாழ்வின் விடுதலைக்கு சொந்தமானதல்ல. கீதை உருவாக்கப்பட்ட விதம் எப்படியானது? ஆரியர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் நாகரீகத்தை, வாழ்க்கைமுறையை சிதைத்து தங்களுக்கு சாதகமான விதிகளை, கதைகளை உருவாக்கினர். அவை வேதங்கள், உபநிடங்கள், சாத்திரங்கள் என பல வடிவங்களில் உருவாக்கப்பட்டது. இவை அனைத்திலும் பார்ப்பனீயம் வெளிப்படுவதை காணலாம்.

பகவத்கீதை என்பது குருஷேத்திர யுத்தத்தில் தேரோட்டும் சாரதியான கண்ணன் அர்சுனனுக்கு அருளிய உபதேசங்கள். மகாபாரத கதையில் நடந்ததாக சொல்லப்படுகிற ஒரு பகுதியை தொகுத்த நூல் தான் பகவத்கீதை. நமது மக்களுக்கு அறவழியை, அன்பை, மனிதநேயத்தை, அறம் சார்ந்த வாழ்வை போதிக்கிறதா கீதை? போர்க்களத்தில் நின்ற அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பவர்களில் தனது உறவினர்களை, சித்தப்பாமார்களை....காண்பதாகவும். அவர்களை கொன்று நாட்டைப் பிடிப்பது தேவையில்லை என்கிறான். ஆனால், அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பது யாரென்றும் பிரித்துப் பார்க்காமல் கொலைகள் செய்ய கண்ணன் வழங்கிய அறிவுரை தான் கீதை. கொடுத்த வாக்குறுதிகளையும் போர்க்கள விதிகளையும் மீறி தந்திரங்களால் எதிரியை கொலை செய்தவன் கண்ணன்.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கியத்தை நடைமுறை வாழ்வில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை என்ன ஆனது? மேல்சாதி அடிமைத்தனத்திற்கும், பணக்கார வர்க்க அடக்குமுறைக்கும் சந்ததிகளை இழந்து கூனி குறிகி கை கட்டி வாய் பொத்தி நிற்பது மட்டும் தான் மிஞ்சியது. நிலச்சுவாந்தாராக இருக்கிற மேல் சாதிப் பண்ணையாரின் பெல்ட் அடி, செருப்படி, சித்திரவதைகள் அனைத்தையும் அனுபவித்தாலும் வாய்பேசக்கூடாத விதி.

நாள் முழுவதும் உழைத்து அதன் பலனை வணிகம் செய்பவன், அரசன், பூசை செய்பவன் அனுபவிக்க ஊரின் ஒதுக்குப்புறத்தில் அல்லது காடுகளில் ஒழிந்து வாழ்வது தான் கடமையா? கோவில் முதல் அனைத்தையும் உடல் உழைப்பால் கட்டியெழுப்பி கடமையை செய்து; மரியாதை முதல் வழிபடும் உரிமை வரை வேடிக்கை பார்ப்பவர்கள் அனுபவிக்க கொடுப்பதா கடமை? இந்த புறக்கணிப்பின் வேதனையை பொறுத்துக் கொள்வது தான் கீதை சொல்லும் கடமையா?கடமையை செய்தால் அதன் பலனை அனுபவிக்க உழைப்பவனுக்கு உரிமையுண்டு. இதை தடுப்பது கண்ணனின் உபதேசமாக இருந்தால் அவன் முழுமுதல் கடவுளல்ல! வர்க்க பேதத்தையும் வர்ணபேதத்தையும் கட்டிக்காக்கிற முதன்மையானவன்.

அடக்குமுறையிலிருந்து விடுதலையை தருவது தான் நல்ல நெறியாக இருக்கமுடியும். கட்டுகளிலிருந்து கட்டற்ற தன்மைக்கும். விலங்குகள் பூட்டிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த மனிதர்களாகவும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களிலிருந்து முழு உரிமையுள்ள சமமான மனிதர்கள் என்பதும் தான் மனித முன்னேற்றத்திற்கு அவசியமான அணுகுமுறை.

கீதை "கடமையை செய்! பலனை எதிர்பாராதே" என்பதை திருத்தி படியுங்கள்! கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்! வர்ண, வர்க்கபேதமற்ற மனிதர்களாக நடைபயில கிருஷ்ணனின் இந்த மாயாஜாலம் அவசியமில்லை!!

(கீதை சாதி அடிமைத்தனத்தை போதிக்கிறதா? அடுத்த பதிவில் தொடரும் ...)

திரு

23 பின்னூட்டங்கள்:

அஞ்சாநெஞ்சன் said...

நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். குர்ஆன் 12:22.

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டு கொள்வார். (குர்ஆன் 99:7)

கடமையைச் செய்... பலனை எதிர்பார் என்று கூறும் இஸ்லாத்தினை நோக்கி வர இன்னும் என்ன தயக்கம்?

thiru said...

//anjaanenjan said...
நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். குர்ஆன் 12:22.

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டு கொள்வார். (குர்ஆன் 99:7)

கடமையைச் செய்... பலனை எதிர்பார் என்று கூறும் இஸ்லாத்தினை நோக்கி வர இன்னும் என்ன தயக்கம்? //

அன்பு அஞ்சாநெஞ்சன்,

கீதையில் மறைத்து வைத்திருக்கிற அரசியல் உள்நோக்கத்தை விமர்சிப்பது இந்த கட்டுரையின் நோக்கம்.

இஸ்லாம் உட்பட எந்த மதத்திற்கும் ஆள் சேர்ப்பது என் பதிவின் நோக்கமல்ல. இந்த பதிவில் இது பொருத்தமில்லா கருத்தாக நினைக்கிறேன். இது கீதையும் குரானும் பற்றிய ஒப்பீட்டு பதிவு அல்ல.

உங்கள் வருகைக்கு நன்றி!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

The Aryan Invasion theory has been discredited and discarded.Criticise Bhagavat Gita
with understanding.Dont take a sentence out of context and build your arguments on that basis.

மிதக்கும்வெளி said...

உண்மையில் கீதையில் இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் கீதை கடமை என்று குறிப்பிடுவதெல்லாம் வருணதர்மத்தைத்தான்.
" சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்
குணகர்மா தஸ்ய கர்த்தாராமாபி
வித்யாம்பரத.."
என்பது கீதையின் கூற்று. இதன் பொருள் "எல்லா வருணங்களையும் நானே படைத்தேன். அந்த வருணங்களுக்கான தொழிலையும் நானே படைத்தேன். இதைப் படைத்தவனாகிய நான் நினைத்தால் கூட மாற்றமுடியாது" என்பதாகும். மேலும் கீதையின் புரட்டு பற்றி அறிய தோழர்.வீரமணியின் 'கீதையின் மறுபக்கம்' மற்றும் சமீபத்தில் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'பகவத்கீதையும் இந்திய அரசியலும்' (ஆசிரியர் பெயர் நினைவில்லை) நூல்களைப் படிக்கவும்

thiru said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும், புத்தகங்கள் பற்றிய தகவலுக்கும் நன்றி மிதக்கும் வெளி!

Sivabalan said...

//கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்! //

சரியா சொன்னீங்க.. ம்ம்ம்

thiru said...

//ravi srinivas said...
The Aryan Invasion theory has been discredited and discarded.Criticise Bhagavat Gita
with understanding.Dont take a sentence out of context and build your arguments on that basis.//

ரவி,

ஒரு விதத்தில் அறிவும், ஆய்வுகளும் உண்மையை மறைக்க பயன்படுகிறது. அது ஆரியம் பற்றிய சமீபத்திய தகவல்களில் உண்மையாக இருக்கலாமா என எண்ண வைக்கிறது. ஆரியம் பற்றிய சமீபத்திய தியரி சரியா இல்லையா என்பது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

கீதையின் ஒரு வார்த்தையை அல்லது பகுதியை அதன் சூழலில் பார்க்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டாம். முடிந்தால் நீங்கள் சொல்லும் context என்ன என விளக்குங்கள். ஆதாரத்துடன் பதில் தர தயார்.

பார்ப்பனீய கருத்துக்களின் மைய்யமான கீதையை மேலேழுந்த பார்வையில் விமர்சிக்கவில்லை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

thiru said...

//Sivabalan said...
//கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்! //

சரியா சொன்னீங்க.. ம்ம்ம்//

வருகைக்கு நன்றி சிவபாலன்

ரவி said...

அதானே !!! சூப்பர் சிந்தனை...

கோவி.கண்ணன் [GK] said...

ஒருவர் 10 பதிவுகள் எழுதிவிட்டு பின்னூட்டம் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு

"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே "

என்ற வாசகம் நன்றாக புரியும் !

:)

Anonymous said...

திரு,

கி.வீரமனியின் புத்தகத்தை எந்த முட்டாளும் வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

வீரமனி கூட்டத்தின் கீதை எதிர்ப்பு உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் எழுதிய புத்தகத்தில் கீதையை புகழ்ந்து எழுதியிருப்பாரா என்ன ?

எத்தகைய பாவம் செய்த பென்னாக இருந்தாலும் அவளுக்கு மோட்சம் உண்டு என்று இருக்கும் ஒரு வாக்கியத்தை பென்கள் எல்லாரும் பாவம் செய்தவர்கள் என்பது போல மொழி பெயர்ப்பு செய்தவர் தான் வீரமனி.

அந்த புத்தகத்தை வைத்து கொண்டு ஜல்லியடிக்க வேண்டாம். ஏற்கனவே தமிழ்மன முல்லாக்கள் சிலர் சேர்ந்து முயற்ச்சி செய்து பார்த்து தோல்வி அடைந்துவிட்டனர்.

//அவனது மனிதத்தன்மையை பாருங்கள். //

உங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான் அவர்களை சமயம் கிடைக்கும் போது போட்டுத்தள்ளாமல் சும்மா விட்டுவிட வேண்டும்?

நல்ல "மனிதத்தனமையை" அய்யா உங்களுக்கு.

thiru said...

//Sadaiappa a dit…
"கடமையை செய் பலனை எதிர்பாராதே!"

அட நல்லா இருக்கே நீங்கள் சொல்வது. இதை நான் சொல்லவில்லை கீழே கொடுத்துள்ள சுட்டியைப் படியுங்கள் உங்களுக்கே புரியும்.

http://bhaarathi.net/sundara/?p=293//

சடையப்பா நன்றி உங்கள் வருகைக்கும் சுட்டிக்கும்.

thiru said...

//செந்தழல் ரவி said...
அதானே !!! சூப்பர் சிந்தனை...//

வருகைக்கு நன்றி ரவி!

அஞ்சாநெஞ்சன் said...

// திரு said...
இஸ்லாம் உட்பட எந்த மதத்திற்கும் ஆள் சேர்ப்பது என் பதிவின் நோக்கமல்ல. இந்த பதிவில் இது பொருத்தமில்லா கருத்தாக நினைக்கிறேன். இது கீதையும் குரானும் பற்றிய ஒப்பீட்டு பதிவு அல்ல.
//

இங்கே அந்தக் குறை; அங்கே இந்தக் குறை என்று சொல்லிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக குறையற்ற இறை வார்த்தைகளை ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ள விடுக்கப்பட்டதே எனது பின்னூட்டம்; அன்றி ஆள் பிடிக்கும் அழைப்பு அல்ல. எதற்கும் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமல்லவா?...

thiru said...

//கோவி.கண்ணன் [GK] a dit…
ஒருவர் 10 பதிவுகள் எழுதிவிட்டு பின்னூட்டம் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு

"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே "

என்ற வாசகம் நன்றாக புரியும் ! :) //

கோவி, இந்த விளக்கம் நல்லாயிருக்கே! :)

Hariharan # 03985177737685368452 said...

:-))

thiru said...

//Un utilisateur anonyme a dit…
திரு,

கி.வீரமனியின் புத்தகத்தை எந்த முட்டாளும் வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.//

அனானி நண்பரே! தி.க பொதுச்செயலாளர் திரு.வீரமணியின் புத்தகத்தை படித்து இதை எழுதுகிறேன் என்ற முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? நீங்கள் சொல்வதால் அதை படிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

//வீரமனி கூட்டத்தின் கீதை எதிர்ப்பு உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் எழுதிய புத்தகத்தில் கீதையை புகழ்ந்து எழுதியிருப்பாரா என்ன ?//
ஒருவர் ஒரு கருத்தை அல்லது கொள்கையை ஆதரிப்பதால் அவர் இப்படித்தான் இருப்பர் என்பதை ஏற்க மறுக்கிறேன். அவர் எழுதியதை படித்து சிந்தித்து உண்மை எது என அறியும் பக்குவம் நமக்கில்லையா? எனது எழுத்தையும் முழுமையாக ஏற்க கட்டாயபடுத்தவில்லை. நியாயமிருப்பின் சிந்திக்க அழைக்கிறேன்.

//எத்தகைய பாவம் செய்த பென்னாக இருந்தாலும் அவளுக்கு மோட்சம் உண்டு என்று இருக்கும் ஒரு வாக்கியத்தை பென்கள் எல்லாரும் பாவம் செய்தவர்கள் என்பது போல மொழி பெயர்ப்பு செய்தவர் தான் வீரமனி.//

கீதையின் எந்த பகுதியை குறிப்பிடுகிறீர்கள்? விளக்கமாக விவாதிக்கலாம். அல்லது கீதை பற்றிய எனது பதிவுகளில் இது பற்றி விளக்கமாக எழுத முயல்வேன்.

//அந்த புத்தகத்தை வைத்து கொண்டு ஜல்லியடிக்க வேண்டாம். ஏற்கனவே தமிழ்மன முல்லாக்கள் சிலர் சேர்ந்து முயற்ச்சி செய்து பார்த்து தோல்வி அடைந்துவிட்டனர்.//

கீதை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? இல்லையே! ஜல்லி என்ன? நீங்கள் கலக்கிற கலவையில் நிறம் மாறினால் ஜல்லி இல்லை அப்படித்தானே? கீதையும் விமர்சனத்திற்குட்பட்டது. ஒரு சாமானியனின் பார்வையில் கீதை புனிதமானதா என்ற கேள்விக்கு விடை காணும் எனது முயற்சி தொடரும். இதில் வெற்றி அல்லது தோல்வி என்பதல்ல இலக்கு. கீதை போதிக்கிற ஆதிக்க அரசியலை வெளிப்படுத்துவது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். எனக்கு அடையாளம் தேடும் முயற்சியல்ல.

////அவனது மனிதத்தன்மையை பாருங்கள். //

உங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான் அவர்களை சமயம் கிடைக்கும் போது போட்டுத்தள்ளாமல் சும்மா விட்டுவிட வேண்டும்?

நல்ல "மனிதத்தனமையை" அய்யா உங்களுக்கு.//

கீதையின் முரண்பட்ட நீதியை அடுத்த பகுதிகளில் பார்ப்போம் அவ்வேளைகளில் இது பற்றிய விளக்கம் தருவேன். அதில் இந்த "மானபங்கம்" பற்றியும் விவாதிப்போம்.

bala said...

//உங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான்//


அனானி அய்யா,

நீங்க யாரை சொல்றீங்க..

வீரமணியையா?
வீரமணி ஒரு மாறி இசகு பிசகாத்தான் செய்வாரு..இருந்தாலும் குடும்ப பேனா?
ஒண்ணும் புரியலை..

திரு அய்யாவை இதைப் பத்தி கவிதையில் விளக்கம் சொல்லும்படி கேட்டுக்கிறேன்.

பாலா

thiru said...

//bala said...
//உங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான்//


அனானி அய்யா,

நீங்க யாரை சொல்றீங்க..

வீரமணியையா?
வீரமணி ஒரு மாறி இசகு பிசகாத்தான் செய்வாரு..இருந்தாலும் குடும்ப பேனா?
ஒண்ணும் புரியலை..//

பாலா உங்கள் நகைச்சுவையை ரசிக்கிறேன். குடும்ப பாட்டு பாடுவாங்க தமிழ் சினிமாவில. இது குடும்ப பேனாவா?

//திரு அய்யாவை இதைப் பத்தி கவிதையில் விளக்கம் சொல்லும்படி கேட்டுக்கிறேன். பாலா//

பாலா, என்னை அய்யா என அழைக்கவேண்டாம். கவிதையிலா இல்லை கட்டுரையிலா எதில் விளக்கம்னு தீர்மானிக்க கூட எனக்கு உரிமையில்லையா? :)

வருகைக்கு நன்றி பாலா!

நேர் வழி. said...

//கி.வீரமனியின் புத்தகத்தை எந்த முட்டாளும் வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.//

கரெக்ட். கி.வீரமனியின் புத்தகத்தை, எல்லா முட்டாள்களும்,வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
முட்டாள்களல்லாதவர்கள் அவ்வாறில்லை என்றும்.

"கடமையை செய். பலனை சமமாக அனுபவி."
பேஷ் திரு. புரட்சிகள் தொடங்கட்டும்.

கதிரவன்.

Muthu said...

அருமையான விளக்கம்.தொடரட்டும் இந்த பணி.

Anonymous said...

கீதையில் சொல்லபபட்டவை 100க்கு 100உண்மை.

பலனை எதிர்பார்த்து அவதிப்பட்டாதே என்பதற்காகத்தன்
அப்படிச் சொல்லப்பட்ட்டிருக்கிற்தே ஒழிய பலனேகிடைக்காது.
பலனை அனுபவிக்காதே. என்று சொல்லப் படவில்லையே.

எப்போ கிடைக்கும், எப்போகிடைக்கும் என்று அவதிப்பட்டு,
டென்சனாகி ஆரோக்கியம் கெடக்கூடாது என்பதற்காகத்தான்
அப்படிக்கூறப்பட்டிருக்கிறது,


விவேகானந்தரும் ஓர் இடத்தில் கூறி இருக்ககிறாரே,
நாம் செய்யும் நல்லவை எல்லாம், நம்மைப் பாதுகாப்பதற்காக
தேவதூதர்கள் போல் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவாம்.
அதேபோல் நாம் செய்யும் தீமைகள் எல்லாம் எம்மீது
பாய்வதற்கு தயாராக புலிபோல் பார்த்துக்கொண்டிருக்கின்றனவாம்.

இவை இரண்டுமே ஒன்றுதான். நீங்கள் விரும்புகிறீர்களோ.
இல்லையோ நீங்கள் செய்தவற்றின் (கடமையாகச் செய்தாலும் சரி,
கட்டாயத்தின் பேரில் செய்தாலும் சரி) பலனோ, பாவமோ நிச்சயம்
உங்களுக்கு கிடைத்தே தீரும்,

குமரன் (Kumaran) said...

//எப்போ கிடைக்கும், எப்போகிடைக்கும் என்று அவதிப்பட்டு,
டென்சனாகி ஆரோக்கியம் கெடக்கூடாது என்பதற்காகத்தான்
அப்படிக்கூறப்பட்டிருக்கிறது,
//

கீதையின் கருத்தினை நன்கு விளக்கியவர் ஏன் அனானியாகச் சொல்ல வேண்டும்? பெயர் போட்டே சொல்லியிருக்கலாமே?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com