Sunday, November 05, 2006

புறக்கணிப்பின் எல்லையில் வெண்மலர்கள்

கோகுல கண்ணனின் பிருந்தாவனத்தின் தெருக்களில், சிவபெருமானில் தலையிலிருந்து வழிந்து பாய்கிற புனித கங்கையின் கரைகளில் வெள்ளுடை தரித்து புன்னகையிளந்த முகங்களை பார்த்திருக்கிறீர்களா? ஆணாதிக்கம் தானே நமது மதங்களின் மையமாகிப் போனது. கணவன் என்பவன் இருக்கும் வரை தான் வாழ்வு! அதன் பின்னர் சாவு அல்லது செத்த நடை பிண வாழ்க்கை இது தான் நமது இந்திய சமுதாயம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் நெறி.

இந்தியாவில் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை உடை தரிக்க வைக்கப்பட்டு தலையில் முக்காடு இடப்பட்ட நிலையில், பூ, பொட்டு என எல்லா ஆசைகளையும் பறிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கும் நிலையில் தெருக்களில் தள்ளப்படுகிறார்கள். இந்து மதம் விதவை பெண்களுக்கு விட்டு வைத்திருக்கிற வாழ்வு இது தான். ராஜாராம் மோகன் ராய், காந்தி என பலரை பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என வரலாற்று பாடத்தில் படித்து பழக்கப்பட்ட நமக்கு அந்த பெண்களின் உண்மை வேதனை விளங்குமா? கணவன் என்கிற ஆணாதிக்க அடையாளத்தை இழந்து விட்டால் பெண்கள் சுகமான வாழ்வை இழக்கவேண்டும் என கற்பிக்கிற நமது வேதங்கள், எந்த வகையில் பெண்களுக்கு நீதியாக இருக்க முடியும்? கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் என்ற விதியை மாற்ற சட்டங்கள் இயற்றி ஆண்டுகள் தான் கடந்தன, இன்னும் சதி என்கிற உடன்கட்டை இந்தியாவில் தொடர்கிறது. உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கிற கூட்டம் இந்த நாட்டில் இன்னும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்து கொண்டு நிமிர்ந்து நடக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தன்னோடு வாழ்ந்து துணையாக இருந்த ஒரு உயிர் பிரிந்தால் இருக்கிற இன்னொரு உயிரையும் கொலை செய்யும் இந்த வழியை காட்டுமிராண்டிகள் கூட கடைபிடிக்கமாட்டார்கள்.

பழமைவாத இந்துக் குடும்பங்களில் சொத்துரிமை பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்பாவிடமிருந்து மகனுக்கு சொத்துரிமை கிடைக்கிறது. ஆனால் விதவையான பெண் சாப்பாடு முதல் அனைத்திற்கும் பிள்ளைகளை சார்ந்திருக்கும் பொருளாதார அடிமை சூழல். இந்த பொருளாதார அடிமைத்தனம் விதவையான பெண்களின் வாழ்வை சுழலாய் சுற்றி அடக்கிவைக்கிறது. பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து பல விதமான அடிமைத்தனத்தில் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கான எந்த சுதந்திர முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளும் தொந்தரவுகளும் விதவைகள் மீது குடும்பம், பாதுகாப்பு என்ற பெயரில் சுமத்தப்படுகிறது. குடும்ப விழாக்களில் அவர்களை ஒதுக்கி வைத்து புறக்கணிக்கிறோம். சகுனம், சாத்திரம் என்ற பெயரில் விதவைகள் எதிரில் வரக்கூடாது, தொடக்கூடாது என பல உளவியல் சித்திரவதைகள். மனித இனத்தில் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை இழி பிறவியாக, தன்னை விட கேவலமாக நடத்தி காயப்பட்ட இதயத்தில் மீண்டும் துன்பத்தை உருவாக்குகிற நடைமுறை கேவலமானது.

இந்தியாவில் மட்டும் 40 மில்லியன் விதவைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த விதமான நிரந்தர வருமானமும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிருந்தாவனத்தின் வீதிகளில் ஒலிக்கிற பஜனை பாடல்களின் குரல்கள் இந்த பெண்களுக்கு சொந்தமானது. கண்ணனின் லீலையை, பாடலாய் கோவில்கள் தோறும் பாடுகிற இவர்கள் பெறும் கூலி மாதம் 500 ரூபாய்க்கும் குறைவானது. பாடலில் சிலாகித்து உருகி கண்ணனை நினைத்து பக்தர்கள் உண்டியலில் நிரப்புகிற பணம் யார் வயிற்றை நிரப்புகிறது? கோவிலுக்கு சென்று சட்டென திரும்பும் நீங்கள் கோவில் வாசலில் பிச்சையெடுக்கும் கூட்டத்தில், கடைத்தெருக்களில், கோவில் மாடங்களில் என பல இடங்களில் இவர்களை காணலாம். இந்திய சமூகத்தில் எளிதில் நம் கண் பார்வைக்கு தெரியாத இவர்கள் வாழ்வை முன்னேற்ற எந்த அக்கறையும் அரசுகள் எடுப்பதில்லை. விதவைகள் மறுமண திட்டம், உணவு திட்டம் என சில மாநில அரசுகள் கொடுக்கிற தொகை சில நாட்களுக்கு கூட போதாது என்பது தான் உண்மை. இதனால் பெரும்பாலான விதவைப் பெண்கள் தங்களது உணவிற்கும் தேவைக்கும் பிறரிடம் கையேந்தும் நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான விதவைகள் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்விக்கப்பட்டவகள். குழந்தைப்பருவ திருமணங்கள் இவர்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படைக்கல்வி, தொழிற்கல்வி, வேலை முதலியவற்றை பறித்து பொருளாதார சூன்யத்தில் நிறுத்தி கைகொட்டி சிரிக்கிறது.

வல்லரசுக் கனவில் வாழ்ந்து அமெரிக்க டாலரில் கண்விழிக்கிற நமது நிக்கர் இந்திய தேசியவாதிகள் கண்களுக்கும், அவர்கள் உடம்பில் ஒட்டிப் பிறந்த டிஜிட்டல் சமாச்சாரங்களிலும் தென்படாத இந்த பாதுகாப்பற்ற பெண்கள் இந்தியா ஒளிர்கிறது என்பதன் அடையாளமா? விதவைகள் வாழ்வின் வேதனையை water என்ற பெயரில் படமாக்க சென்ற தீபா மேத்தாவும் அவரது படக்குழுவினரும் சங்பரிவார கலாச்சார தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி, படப்பிடிப்பை இடைநிறுத்தம் செய்ய நிற்பந்திக்கப்பட்டனர். இது தான் இந்து மதமும் அதன் வேதங்களும் இந்த பண்டாரங்களுக்கு சொல்லித்தருகிறதா?

விதவைகள் மறுமணம் என்பது சட்ட வடிவில் மட்டுமல்ல சமுதாய வடிவிலும் அவசியமான கருத்தாக்கத்தை ஏற்படுத்தல் மிக அவசியமாகிறது. விதவைகளுக்கான தொழிற்பயிற்சிகளும், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களும் இன்றைய காலத்தில் மிக அவசியமான தேவை. சொந்தமாக தொழில் செய்து அல்லது வேலை மூலம் வருவாய் ஈட்டி தன்னம்பிக்கையுடன் வாழ வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் இந்திய நாட்டின் பெண்களின் வாழ்வில் ஒளி வீசும். பெண்களுக்கு பல சூழல்களை எதிர்கொள்ளும் விதத்திலான கல்வி ஆணாதிக்க கட்டுகளிலிருந்து பெண்ணின விடுதலையை பெற்றுத் தரும் அருமருந்து.

இறப்பை ஏற்றுக்கொண்டு வாழ்கிற நமக்கு அதன் வழியாக வருகிற இழப்பையும் வாழ்வியல் மாற்றத்தையும் ஏற்று வாழ்கிற இயற்கையான முறையை இந்துமதம் சொல்லித்தராதது ஏன்? கணவன் இறந்ததும் இயற்கைக்கு எதிராக பெண்களை உடன்கட்டை ஏற்றி கொலைகள் புரிய வைத்ததும், சமுதாயத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வைத்ததும் யார்? இதற்கு கடவுள் காரணமா இல்லை கடவுளை கற்பித்தவர்கள் காரணமா? யாராக இருப்பினும் சமூகநீதியின் முன் நிறுத்தி திருந்த வைப்போம். விதவைகளும் மனித உரிமை நிறைந்த பெண்கள். அவர்களுக்கான நீதியான உலகை உருவாக்க முயல்வோம். சமூகத்தின் திட்டங்கள் பாதிக்கப்பட்ட இவர்களுக்காகவும் திரும்பட்டும்.

(நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் அடையாள நாள். இந்த நாளில் நமது குடும்பங்களில், சுற்றத்தில், சமூகத்தில், பணியிடங்களில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து மாற்ற பிரச்சாரத்திற்கான நாள் )

திரு

2 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

//இந்தியாவில் மட்டும் 40 மில்லியன் விதவைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த விதமான நிரந்தர வருமானமும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். //

இந்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது..

ம்ம்ம்.. உண்மையில் சமுதாயத்தில் முக்கியமாக கிராமங்களில் விதவை மறுமனம் என்பது அரிதான விசயமாகவே இருக்கிறது

thiru said...

நன்றி சிவபாலன். ஆம் நமது மக்கள் மனிதநேயத்தை விட பிற விடயங்களை நன்றாக கடைபிடிக்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com