Friday, August 11, 2006

இராஜாஜியும் குலக்கல்வியும்-பாகம்2

கடந்த பதிவில் இராஜாஜி பற்றி நான் எழுதிய பதிவு வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டதால் இரண்டாம் பாகம் எழுத வேண்டியது ஆயிற்று. தினமும் 3 மணி நேரம் மட்டும் கல்வி பெற்று தொழிலும் பழகி அப்பன் செய்த தொழிலை தப்பாமல் மகனும் செய்ய அரிய வாய்ப்பை உருவாக்கிய ச. இராஜ கோபாலாச்சாரி (இராஜாஜி) பற்றி விமர்சனம் எழுதுவதா? அந்த திட்டம் மட்டும் நடைமுறையில் இருந்திருந்தால், இன்று தகப்பன் கடின வேலை செய்ய பிள்ளைகள் படித்த படிப்பிற்கான வேலை தான் பார்ப்பேன் என ஊர் சுற்றி வருவார்களா? இந்த ‘உயரிய’ சிந்தனையை படித்து சற்று விளக்கமாக எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதை படித்த பின்னராவது வலைப்பதிவாளர் டோண்டு புரிந்துகொள்வார் என நம்பி இதை பதியவில்லை. இணைய ஊடகத்தில் தமிழ்மணம் ஊடாக பொய்யான தகவலை, பரப்புரையை வைத்து அடக்கப்பட்ட சமுதாய மக்களின் காயங்களில் குத்தி மீண்டும் புண்ணாக்குகிற கோரத்தை காட்டுவதே இதன் நோக்கம். பின்னூட்டங்களுக்காகவோ அல்லது பாராட்டுகளுக்காகவோ என் எழுத்துக்கள் அமையாது. இராஜாஜி மீது எனக்கு எந்த தனிமனித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் இராஜாஜியின் குலக்கல்விக் கொள்கையை அதன் விளைவுகள் தமிழகத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை சமூகவியலாளன் என்ற முறையில் விமர்சிக்கிறேன்.

//எனக்கு வயது 60 முடிந்து விட்டது. மேலும் ராஜாஜியின் கல்வித் திட்டத்தைப் பற்றி எழுதுவதற்காகவே மெனக்கெட்டு அக்காலக் கட்ட கல்கி பத்திரிகைகளை படித்து விட்டு பதிவு போட்டவன். உங்கள் தகுதிகளைப் பற்றி இப்போது கூறவும்
...டோண்டு//

எனது தகுதி என்ன என்பது பற்றி டோண்டுவிற்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை, அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை. வயதும், கல்கி இதழும் தான் வரலாற்று நிகழ்வுகளை பதிய, விமர்சிக்க தகுதியெனில் அதில் முரண்படுகிறேன். குறைந்தபட்ச ஆலோசனையாக டோண்டுவுக்கு சொல்ல விரும்புவது வேறு இதழ்களையும், நூல்களையும், அறிக்கைகளையும் கூட படியுங்கள். உங்களது ‘வட்டத்தை’ கடந்த மனிதர்களிடமும் இந்த பிரச்சனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தாங்களுக்கு பிடித்தமானவர் அல்லது தாங்கள் விரும்பும் கொள்கையை நடைமுறைப்படுத்த முனைப்பாக இருந்தவர் என்பதால் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் மக்களுக்கு நன்மையாக அமையுமா?

//நான் எனது பதிவில்; எழுதியதை சரியாகப் பார்க்காமல் உளறினால் என்ன செய்வது? உண்மை நிலைமை என்னவென்றால் அக்காலக் கட்டத்தில் குழந்தைகளை பள்ளிகளுக்கே அனுப்பாமல் முழு நேரமும் குலக்கல்வி தரப்பட்டது. அவர்களிடம் போய் "ஐயா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" எனக் கூறப்பட்டது. அவ்வளவே. அதைப் புரிந்து கொள்ளாது அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ளாதது போல நடிக்கும் நீங்கள்தான் லாரி லாரியாகப் பொய்யை உதிர்க்கிறீர்கள்...டோண்டு//

டோண்டு சொல்வது போல எந்த பெற்றோரும் அல்லது இராஜாஜி தவிர வேறு எந்த அரசும் தமிழகத்தில் அல்லது அன்றைய சென்னை மாகாணத்தில் குலக்கல்வி கொள்கையை கொண்டுவர வில்லை. 1950 களில் பெற்றோர் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பினார்களா இல்லையா என்பது இங்கு கேள்வியாக வருகிறது. இராஜாஜியின் ‘குலக்கல்வித் திட்டம்’ தடைகளை மீறி முயற்சி எடுத்தவர்களையும் முடக்கி வைத்து மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்பறை கல்வி, மீதி வேண்டுமானால் சுயமாக கற்றுக்கொள்ளுங்கள் என தூண்டியதா இல்லையா? அதுவும் அப்பன், பாட்டன், முப்பாட்டன் செய்த சாதீய அடிமைத் தொழில்களை செய்து சூத்திரனாக, பஞ்சமனாக இரு என பார்ப்பனீய தந்திரத்தை அரசு திட்டமாக நிறைவேற்றியதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் இராஜாஜி.

பெற்றோர் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாவிட்டால் அரசின் தலைமையை வைத்திருந்த இராஜாஜிக்கு அதற்கான காரணங்களை கழையும் திட்டங்களை ஏற்படுத்துவதை விட்டு வேறு என்ன வேலை? மக்களின் நெருக்கடி தாங்காது பதவியை விட்டு இராஜாஜி ஓடியதும் காமராஜரால் மட்டும் அதே ஆண்டில் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டுவர முடிந்தது எப்படி? அதற்காக பல கிராமப்புற பள்ளிகளை உருவாக்க முடிந்தது எப்படி? மாணவர்கள் எண்ணிக்கை அளவிற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிந்தது எப்படி? காமராஜருக்கு மட்டும் அதற்கான நிதி கிடைத்தது எப்படி? பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை அடக்குமுறை குலத்தில் பிறந்த இராஜாஜிக்கு புரியாமல் போனது வியப்பில்லை, பாதிக்கப்பட்ட வகுப்பில் பிறந்த காமராஜருக்கு அது புரிந்தது தான் கல்வித் திட்டங்களாக மறுமலர்ச்சி பெற்றது.

"அய்யா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" என எங்கே போய் இராஜாஜி கெஞ்சினார்? அக்கிரகாரத்து பிள்ளைகள் கல்வி பெறும் வேளை, பஞ்சமன் வீட்டு பிள்ளை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொல்லையில் பீ அள்ளவும் சாணி பொறுக்கவும் பரம்பரை பரம்பரையாக தொடர வைக்க இராஜாஜி நினைத்து வடித்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம். அது மட்டுமல்ல நிதிப்பற்றாக்குறை என்ற ‘காரணத்தை’ காட்டி தமிழகமெங்கும் சுமார் 6000 பள்ளிக்கூடங்களை மூடினார் அந்த ‘அறிவுமேதை’.

இராஜாஜிக்கும் அவர் சார்ந்த குலத்தினருக்கும் இந்த திட்டத்தின் அவசியமென்ன?
மயங்கி கிடந்த மன்னர்களுக்கும், ஆங்கிலேய அடக்குமுறையாளர்களுக்கும் பிராமணர்கள் காலங்காலமாக ‘சேவைகள்’ செய்து அனுபவித்து வந்த பதவிகள், பட்டங்கள், அதிகாரம், கல்வி முதலியவைகளுக்கு ஆபத்து அரசியல் சட்டம் வடிவில் வந்தது. அந்த காலகட்டத்தில் பெரியாரின் இயக்கப் பணிகள் தமிழகத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தை அசைக்க துவங்கியிருந்தது.

26, ஜனவரி 1950ல் இந்தியா அரசியல் சாசனத்தை பிரகடனம் செய்து குடியரசாகிய பின்னர், பிராமணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் சென்று, வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’ வழங்க இருந்த முறை violated the fundamental right to non-discrimination (முறையாக புரிந்துகொள்ள ஆங்கில வார்த்தைகளில்) ஆகவே அதை நீக்கவேண்டும் என கோரினர். நீதிமன்றங்களில் நிறைந்திருந்த பார்ப்பனீயமும் சமூகநீதியை நிலைநாட்ட இருந்த முறையானது அரசியல் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டங்கள், கூட்டங்கள் என எதிர்ப்பு கிளம்பியதன் வெளிப்பாடு தான் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு Clause 4 to the Article 15: "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes." என்ற பகுதி அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. (பெரியார் என்றாலே வேப்பங்காயாக பிராமணீயத்தில் ஊறியவர்களுக்கு கசப்பதன் மூலகாரணம் இந்த திருத்தம்). அன்று பெரியார் மட்டும் இந்த அரசியல் போராட்டத்தை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று தமிழகமெங்கும் குலக்கல்வியில் பீ அள்ளும் கூட்டம், சாணி பொறுக்கும் கூட்டமாக தான் இருந்திருக்கும். இப்போதைய இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையே அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமையின் அடிப்படையில் சட்டரீதியாக வழங்கப்படுகிற உரிமை (பிச்சையுமல்ல, சலுகையுமல்ல).

இந்த அரசியல் சட்டத்திருத்தம் வழியாக பிராமணரல்லாதவர்கள் கல்வி பெறுவதற்கான ஒதுக்கீடுகள் வர வாய்ப்புள்ளதையும் அதன் வழி கல்வி பெற்று இந்த சமுதாயத்தில் பிராமணனும், சக்கிலியனும் மனிதன் என்ற விதத்தில் சமமே என வந்தும் என்பதை கணிப்பிட்டது இராஜாஜியின் பிராமணீய அறிவு. அதை தடுக்க இராஜாஜி வடித்தெடுத்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம். குலக்கல்வித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தியிருந்தால் அதன் விளைவாக தொடர்ந்து உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்ற வேறுபாடு இன்று இருப்பதை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும். (இதற்கு மேல் இது பற்றி விளக்கம் அவசியமில்லை என கருதுகிறேன்). இராஜாஜியின் திட்டம் தொழிற்கல்வி என இன்னும் சாதிப்பவர்களுக்கு நேரம் கிடைக்கும் வேளை கருத்துக்களை விளக்கமாக பதிவு செய்யலாம்.

//இன்னொரு விஷயம், குலக்கல்வித் திட்டம் என்பது அதன் பெயரே விஷமத்தனமாகக் கொடுக்கப்பட்டது. அதை பிடித்துக் கொண்டு நீங்கள் தொங்குவதுதான் பரிதாபம் … டோண்டு//

விசமமான திட்டத்திற்கு கொடுத்த சரியான பெயர் அது. குலக்கல்வி திட்டம் என அது பெயரிடப்பட்டதில் தவறில்லை. அந்த திட்டத்தின் உள்ளே ஒளிந்திருந்த சூட்சுமம், சாதீய வர்ணமுறையை கட்டிக்காக்கிற ‘ராஜரிசி’ சாணக்கியத்தனம் அது தான் தெரிந்தே செய்த அயோக்கியத்தனம்.

//அப்படியென்றால் 1952-ல் ஏன் எல்லோரும் அவர் காலில் போய் விழுந்தார்களாம்? அவர் இருந்த இரண்டு வருடங்களும் எவ்வளவு நெருக்கடியான ஆண்டுகள் என்பதை அறிவீர்களா?// இராஜாஜியிடம் யாரும் காலில் விழுந்து அழைத்து வரவில்லை. இராஜாஜியின் சித்து விளையாட்டுகளில் மயங்கிய காங்கிரஸ் தலைமை அவரை முதலமைச்சராக பதவியிலமர்த்தியது என்பதும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல என்பதும் தான் உண்மை. காங்கிரஸ் செய்த இமாலய தவறுகளில் ஒன்று தமிழகத்தில் இராஜாஜியை முதல்வராக்கியது என்பது காலம் கடந்த உண்மை. நோயினால் இராஜாஜி பதவி துறந்ததாக டோண்டு குறிப்பிடுவது உண்மைக்கு மாறான தகவல். மக்களின் எதிர்ப்பு தாங்காது இராஜாஜி பதவியை துறந்தார் என்பதும், அந்த எதிர்ப்பு குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரானது என்பதும் வரலாற்று உண்மை. இராஜாஜி பதவியை இழந்ததால் தமிழகம் இழந்தது அடுத்த 30 ஆண்டுகளில் பிராமணீய ஆதிக்கம். இராஜாஜி பதவி இழந்ததால் தமிழகம் பெற்றது ஏராளம் அவற்றுள் ஒன்று காமராஜர் என்கிற கருப்பு சூரியன் எல்லோருக்கும் வழங்கிய நிறைவான செல்வம் கல்வி!


திரு

15 பின்னூட்டங்கள்:

ஜோ/Joe said...

// இராஜாஜி பதவி இழந்ததால் தமிழகம் பெற்றது ஏராளம் அவற்றுள் ஒன்று காமராஜர் என்கிற கருப்பு சூரியன் எல்லோருக்கும் வழங்கிய நிறைவான செல்வம் கல்வி!//

சத்தியம்! சத்தியம்!! சத்தியம்!!!

Anonymous said...

One more fact on the subject is ...
On his first term in madras state, Rajaji closed sum of 6,000 schools. And on his second term, just before introducing his mischievous half-day school scheme, he closed another 6,000 schools. Most of them on rural villages. I really wondering what could be the reason for closing school when the state desperately needs it. Could it be budget...etc, I can't personally buy any reason for closing those schools. As everyone knows, when Kamaraj become CM, the first thing he did was reopen those schools closed by Rajaji and revoke his half-day school scheme. And the rest...history knows, kamaraj went ahead and opened 20,000 more new schools allover tamil nadu, totaling 30,000+ in 8 years.

Thx.

thiru said...

நன்றி ஜோ, அனானி!

babble தலைப்பு சம்பந்தமான கருத்தை வையுங்கள். அதை விடுத்து திசைதிருப்பல்களான சம்பந்தமில்லா பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும் என தெரிவிக்கிறேன். உங்களது வருகைக்கு நன்றி! காமராஜரின் தேர்தலை அல்லது அரசியல் வாழ்வை அலசுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.

ஆச்சாரியாரின் ஆரிய குலக்கல்வி பற்றிய விமர்சன பார்வை. இதற்கு எதிர் கருத்து இருந்தால் தாராளமாக பதியுங்கள்.

திரு

Anonymous said...

As you do, I do respect Rajaji on certain aspects, but not in this one.
Even if the logic is to bring more student to study at least for 3 hrs a day... I don't know how much effort Rajaji put together to convence parents to send their kids to school, And, I don't understand the reason for closing 6,000+ schools(I guess 12,000+ in two CM periods), and how this closing school would help to educate more students.

But few things I know what kamaraj did to my education are ...

1. He listened to me.
2. He worked for me.
3. He did innovative job for my education.
4. He feed me to study
5. He kept my education need in his instinct
6. End of the day, this is what Kamaraj did for my education in his 9 yrs work.

And still people expect me to buy the theory of Rajaji tried to do good to my education, And more than Kamraj.... for god sake, Give me a break.
I guess I need strong heart not to hate Rajaji on bias because of these biased people.

வேல்பாண்டி said...

ஒரு பத்து ஆண்டு ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் இருந்திருத்தால் இந்தியாவில் தமிழகத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும்?

டோண்டு விளக்குவாரா?

இதிலிருந்தே ராஜாஜியின் நிர்வாகமுறையின் பிற்போக்குதுவம் விளங்கும்.

-வேல்-

Anonymous said...

I'm same person posted the number of schools Rajaji closed. I apologize I got the number wrong. In his first term (1937-39)he closed sum of 2,500 schools (earlier I stated the count wrongly as 6,000). And in his second term (1952-54) he closed sum of 6,000 schools.

One should not forget when he did this closing of school, the total number of school are sum of 15,000.

I apologize again for getting a number wrong earlier.

Thx.

Thangamani said...

//"அய்யா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" என எங்கே போய் இராஜாஜி கெஞ்சினார்? அக்கிரகாரத்து பிள்ளைகள் கல்வி பெறும் வேளை, பஞ்சமன் வீட்டு பிள்ளை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொல்லையில் பீ அள்ளவும் சாணி பொறுக்கவும் பரம்பரை பரம்பரையாக தொடர வைக்க இராஜாஜி நினைத்து வடித்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம். அது மட்டுமல்ல நிதிப்பற்றாக்குறை என்ற ‘காரணத்தை’ காட்டி தமிழகமெங்கும் சுமார் 6000 பள்ளிக்கூடங்களை மூடினார் அந்த ‘அறிவுமேதை’.//

//26, ஜனவரி 1950ல் இந்தியா அரசியல் சாசனத்தை பிரகடனம் செய்து குடியரசாகிய பின்னர், பிராமணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் சென்று, வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’ வழங்க இருந்த முறை violated the fundamental right to non-discrimination (முறையாக புரிந்துகொள்ள ஆங்கில வார்த்தைகளில்) ஆகவே அதை நீக்கவேண்டும் என கோரினர். நீதிமன்றங்களில் நிறைந்திருந்த பார்ப்பனீயமும் சமூகநீதியை நிலைநாட்ட இருந்த முறையானது அரசியல் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டங்கள், கூட்டங்கள் என எதிர்ப்பு கிளம்பியதன் வெளிப்பாடு தான் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு Clause 4 to the Article 15: "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes." என்ற பகுதி அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. (பெரியார் என்றாலே வேப்பங்காயாக பிராமணீயத்தில் ஊறியவர்களுக்கு கசப்பதன் மூலகாரணம் இந்த திருத்தம்). அன்று பெரியார் மட்டும் இந்த அரசியல் போராட்டத்தை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று தமிழகமெங்கும் குலக்கல்வியில் பீ அள்ளும் கூட்டம், சாணி பொறுக்கும் கூட்டமாக தான் இருந்திருக்கும். இப்போதைய இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையே அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமையின் அடிப்படையில் சட்டரீதியாக வழங்கப்படுகிற உரிமை (பிச்சையுமல்ல, சலுகையுமல்ல).///


அருமையான, அவசியமான கட்டுரை திரு. பொய்களை உரத்துச் சொல்வதன் மூலம் வரலாற்றைத் திரித்துவிடுவது இனி முன்பு போல சுலபமானது அல்ல என்பது உங்கள் கட்டுரையால் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அருண்மொழி said...

//அக்காலக் கட்ட "கல்கி" பத்திரிகைகளை படித்து விட்டு பதிவு போட்டவன்.//

"கல்கி" - ஹி ஹி ஹி

அந்த அதிமேதாவி புத்தகம் கல்விக்கண் திறந்த காமராசரை "பெரிய பதவி, சின்ன புத்தி" என்று அன்புச்சொட்ட பாராட்டி தள்ளியது.

நம்ம சுப்பிரமணி matterல எப்படி எழுதினார்கள் என்று பாருங்கோ. கருணாநிதி ஆட்சிக்கு வரும் வருமானத்திற்கு காரணம் அம்மாதான் என்று புகழ் பாடுவதையும் பாருங்கோ.

அப்படிப்பட்டவா "அறிஞரை" எப்படின்னா குறை சொல்லும்.

Muse (# 01429798200730556938) said...

ஏறத்தாழ 15,000 பள்ளிகள். ஒரு பள்ளிக்கு குறைந்தது எட்டு வாத்தியார்கள் என்று கணக்கெடுத்தாலும் ஏறத்தாழ ஒரு லக்ஷத்திற்கும் மேலான ஆசிரியர்கள் வேலையிழப்பு. ஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் என்று வைத்தால் 15,00,000 மாணவர்கள் கல்வி இழந்தனர். பெரிய அநியாயம். இதை யாரும் எதிர்க்கவில்லையா? இதை ஏதேனும் அந்தக் கால பத்திரிக்கை எதிர்த்திருக்கக்கூடும். குறைந்த பக்ஷம் வெளியிட்டாவது இருப்பார்கள். அப்படியே இல்லாவிட்டாலும் அரசு உத்தரவாவது இருக்கும்.

இவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்தோ அல்லது அந்தக் காலத்தில் வெளியான வேறேதேனும் ஆதாரத்தின் அடிப்படையிலோதான் இதை பதிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது எது என்று சொல்ல முடியுமா?

Anonymous said...

Same anony... A friend here asked some reference for school closing by Rajaji. Here's what I can provide.

As I said in earlier comment, based on my reading the total number of schools Rajaji closed was sum of 8,500 (2,500 in 1937-39 + 6,000 in 1952-54). But I can't speculate on number of teachers unemplyed and number of students affected per school. But I'm afirmative about number schools around 8,500.

1. Chapter-10; Page-122
Book Title: Kamaraj oru sagaptham
Author: A.Gopanna
Publisher: Surya Publications

2. Chapter-2; Page-33
Book Title: Kamarajarin Porkaala Aaatchi
Author: ka. sakthivel
Publisher: Avvai

Anonymous said...

From the same books I can quote more facts on this subject...like... he devised the plaf by himself without even discussing in cabinent or congress comitte... the xxxxx words he used to defend his plan... the no-confidence motion votes against him... and the health nothing to do with his resignation.

after all, people will able to understand the devilish intend of this plan witht existing facts in above comments. so I guess no need to add another big details.

Machi said...

கண்டிப்பாக இராஜாஜி பல நல்ல செயல்களை தமிழ்நாட்டுக்கு செய்திருப்பார். அதை எடுத்து சொன்னால் தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு இராஜாஜியின் மேல் மதிப்பு கொள்வார்கள். அதை விட்டு விட்டு அவரின் மோசமான "குலகல்வி" திட்டத்தை நியாயபடுத்தி பதிவு போட்டு அவர் மேல் உள்ள மதிப்பை உயர்த்துகிறேன் பேர்வழி என்று அவரின் மதிப்பை சிலர் குறைத்துள்ளார்கள். குலகல்வி மூலம் அவர்கள் அடைய வேண்டிய நன்மை போய் விட்டதே என்ற ஆற்றாமையினால் பதிவு போட்டிருக்கலாம்.

thiru said...

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

நண்பர் Muse, இன்னும் ஆதாரங்கள் வேணுமா? இராஜாஜியின் 2ஆவது பதவி காலத்தில் மூடியது சுமார் 6000 பள்ளிகள். எதிர்ப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடை தான் இந்த பதிவில் இருக்கிறதே. பதிவை முழுதாக படித்துவிட்டு வாருங்கள்!

Ram said...

Niraiya vishayangalai therinthu konden.! Aanaaal anaithilum yenakku undanpaadu yendru porulalla...perumpaalana karuthukkalai yerkiren..yennudaiya arasiyal araivai viruthi seithathu intha post..Nandrikal pala.!!

Manitha vaalvin aarambam Kalvi.! Athil oru pizhai yendraal yennal ondrum pesa mudiyavillai...Rajaji kku intha yennam irunthirunthaal athu mutrilum thavare.!!!

Muse (# 01429798200730556938) said...

திரு,

பதிவில் எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சாட்டு மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் ஆதாரத்தை கேட்டிருந்தேன். பின்னூட்டத்தில் தாங்கள் கொடுத்திருந்த ஆதாரம் தங்கள் குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கிறது. தற்போது தங்கள் பதிவு உறுதிப்பட்டுள்ளது.

ஆதாரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்ததற்கு நன்றிகள்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com